கார்சியா தீவின் இலங்கை தமிழர்களை மூன்றாம் நாடு ஒன்றுக்கு அனுப்ப முயலும் இங்கிலாந்து!

Reha
3 years ago
கார்சியா தீவின் இலங்கை தமிழர்களை மூன்றாம் நாடு ஒன்றுக்கு அனுப்ப முயலும் இங்கிலாந்து!

இங்கிலாந்தின் ஆதிக்கத்தில் உள்ள சாகோஸ் தீவுகளில் உள்ள தமிழ் அகதிகள், தாம் ருவாண்டா மாதிரியான திட்டத்தின் கீழ் நாடு கடத்தப்படலாம் என்று அஞ்சுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக்குத் திரும்பலாம் அல்லது மூன்றாம் நாடு ஒன்றுக்கு வெளியேற்றப்படலாம் என இங்கிலாந்து அரச சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளதாக தெ கார்டியன் தெரிவித்துள்ளது. டியாகோ கார்சியா தீவு, பூமத்திய ரேகைக்கு சற்று தெற்கே உள்ள 10 சதுர மைல் பள்ளத்தாக்கின், தான்சானியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு இடையில் அமைந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி, பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பகுதி என்று அழைக்கப்படும் சாகோஸ் தீவுகளின் மீது இங்கிலாந்து தொடர்ந்து இறையாண்மையைக் கோருகிறது.  1960 மற்றும் 70களில் பிரித்தானிய-அமெரிக்க கூட்டு இராணுவத் தளத்திற்கு வழிவகுப்பதற்காக, தீவின் பூர்வீக சாகோசியன் குடிமக்கள் வலுக்கட்டாயமாக அங்கிருருந்து அகற்றப்பட்டனர். இந்தநிலையில் பிரித்தானியரால் உரிமை கோரப்பட்ட சாகோஸ் தீவுகளில் இருந்து தஞ்சம் கோரும் தமிழ் அகதிகள், இங்கிலாந்து அரசாங்கத்தால் வகுக்கப்பட்ட ருவாண்டா பாணி திட்டங்களின் கீழ் வலுக்கட்டாயமாக மூன்றாவது நாட்டிற்கு வெளியேற்றப்படுவதை எதிர்கொள்கின்றனர்.

புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப முடியாத பட்சத்தில் வேறு ஒரு வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என அரச சட்டத்தரணிகள் புகலிடக் கோரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். ருவாண்டா ஒரு சாத்தியமான இடமாக இருப்பதால், ஏதிலிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் மூன்றாவது நாடுகளுடன் சாத்தியமான ஒப்பந்தங்களை அமைச்சர்கள் ஆராய்கின்றனர் என்று இங்கிலாந்தின் வெளியுறவு அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சித்திரவதைக்கு ஆளானவர்கள் என்று கூறப்படும் தமிழ் ஏதிலிகளின் முதல் படகு, சாகோஸ் தீவுகளின் ஒரு பகுதியான டியாகோ கார்சியாவிற்கு ஒரு வருடத்திற்கு முன்னர். வந்தது. இந்தநிலையில் ஒரு வருடத்திற்கும் மேலாக சாகோஸ் தீவுகளில் உள்ள தமிழ் அகதிகளுக்கான அடிப்படை உரிமைகளை பிரிட்டிஷ் அரசாங்கம் மறுத்துள்ளதாக புலம்பெயர்ந்தோர் நலனுக்கான கூட்டு சபையின் பணிப்பாளரான ஜெஹ்ரா ஹசன் கூறியுள்ளார்.

ருவாண்டா திட்டத்தைப் போலவே இலங்கை அகதிகளை மூன்றாவது நாட்டிற்கு அவர்கள் வெளியேற்றுவது போல் தெரிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகளுக்கு அரசாங்க சட்ட திணைக்களம் கடந்த வாரம் அனுப்பிய கடிதத்தில் வெளிவிவகார அமைச்சின் மூன்றாம் நாடுகள் என்ற திட்டம் வெளிப்பட்டது. 

பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பகுதியின் குடியேற்ற உத்தரவு, 2004 இல் திருத்தம் செய்யப்பட்டதன் மூலம் மூன்றாம் நாட்டிற்கு குடிபெயர்ந்தவர்களை அகற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் புலம்பெயர்ந்தோரை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப முடியாது என்று முடிவு செய்தால், அந்த நபர்கள் இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட மாட்டார்கள், அதற்குப் பதிலாக அவர்கள் பாதுகாப்பான மூன்றாவது நாட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்பது இங்கிலாந்து அரசின் கொள்கை என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

பிரித்தானிய இந்திய பெருங்கடல் நாடுகளை, மூன்றாம் நாடாக, இங்;கிலாந்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக வெளியுறவு அலுவலக தெரிவித்துள்ளது, எனினும் ருவாண்டாவும் உள்ளடங்குகிறது. எனினும் சாத்தியமான திட்டம் குறித்து மூன்றாம் நாடுகளுடன் அரசாங்கம் ஏதேனும் குறிப்பிட்ட பேச்சுவார்த்தை நடத்தியதா என்ற விடயம் இதுவரை தெரியவரவில்லை.
20 குழந்தைகள் உட்பட சுமார் 120 தமிழ் மக்கள் இந்த தீவில் இருப்பதாக நம்பப்படுகிறது, அவர்கள் அமெரிக்க-இங்கிலாந்து கூட்டு இராணுவ தளத்திற்குள் வேலி அமைக்கப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தமிழக முகாம்களில் இருந்து படகு மூலம் சென்றவர்களாவர்.

சித்திரவதைக்கு ஆளானவர்களும் அவர்களில் உள்ளடங்குவதாக அவர்களது சட்டத்தரணிகள்; கூறுகின்றனர், அவர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் சட்டப் பிரதிநிதிகளை தொடர்பு கொள்வதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக முறையிட்டுள்ளனர்.
ஏப்ரலில், அப்போதைய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன், நூற்றுக்கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டத்தை அறிவித்தார். 

புதிய பிரதம மந்திரி லிஸ் ட்ரஸ், ருவாண்டா திட்டத்தை ஆதரிக்கிறார் மற்றும் இடம்பெயர்வு மற்றும் புகலிடத்திற்கான கடுமையான அணுகுமுறையை தொடர உறுதியளித்துள்ளார். எனவே பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பகுதி புலம்பெயர்ந்தோருக்கு பொருத்தமான நீண்ட கால வசிப்பிடமாக இல்லை என்று பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4