படுகொலை செய்யப்பட்ட சர்வதேச ஊடகங்களின் யாழ்ப்பாண ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 22ம் ஆண்டு நினைவேந்தல்!

Reha
1 year ago
படுகொலை செய்யப்பட்ட சர்வதேச ஊடகங்களின் யாழ்ப்பாண ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 22ம் ஆண்டு நினைவேந்தல்!

படுகொலை செய்யப்பட்ட சர்வதேச ஊடகங்களின் யாழ்ப்பாண ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 22ம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாண ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடக அமையத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அதன் போது மலர்மாலையை மூத்த ஊடகவியலாளர்களான கு. செல்வக்குமார் மற்றும் த. வினோஜித் ஆகியோர் திருவுரு படத்திற்கு அணிவித்தனர். 

அதனை தொடர்ந்து, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் கோமகன் சுடரேற்றியதை தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர். இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு ஊடக அமையம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைந்துள்ள  படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவு தூபியில் இந்த நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு,  சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு உயிர்நீர்த்த ஊடகவியலாளருக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த ஊடகவியலாளருமான பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய உறுப்பினர்கள் உட்பட ஊடகவியலாளர்கள், மதகுருமார்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
2000ஆம் ஆண்டின் ஒக்டோபர் 19ம் நாள் இரவு 9 மணியளவில் யாழ்ப்பாண குடாநாட்டின் முன்னணி ஊடகவியலாளர் நிமலராஜன் தனது வீட்டில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

நிமலராஜன், தான் பணியாற்றிக்கொண்டிருந்த ஊடகங்களுக்கு செய்திகளை அறிக்கையிட்டுக்கொண்டிருந்த போதே சுடப்பட்டார். இதன்போது அவரது தந்தை மற்றும் மருமகன் ஆகியோரும் இதன் போது படுகாயம் அடைந்தனர்.