உக்ரைன் மீதான டிரோன் தாக்குதலுக்காக ஈரானிய நிபுணர்கள் கிரிமியாவில் களமிறக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

Kanimoli
1 year ago
உக்ரைன் மீதான டிரோன் தாக்குதலுக்காக ஈரானிய நிபுணர்கள் கிரிமியாவில் களமிறக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

உக்ரைன் மீதான டிரோன் தாக்குதலுக்காக ஈரானிய நிபுணர்கள் கிரிமியாவில் களமிறக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவ நிபுணர்களை ரஸ்யா கிரிமியாவில் நிறுத்தியுள்ளது என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஈரான் கிரிமியாவில் தனது பயிற்சியாளர்களையும் தொழில்நுட்ப உதவிகளையும் செய்து வருகின்றனர் என்று அமெரிக்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் தலைநகரான கீவ் மீது ரஸ்யா கடந்த திங்களன்று ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இந்த ட்ரோன்கள் ரஸ்யாவால் அனுப்பப்பட்டது. ஆனால் ஈரானில் தயாரிக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது.

இதுகுறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறும்போது, கிரிமியாவில் ஈரானிய ராணுவ வீரர்கள் களமிறங்கி ட்ரோன் தாக்குதலில் ரஸ்யாவுக்கு உதவியதாக நாங்கள் மதிப்பிடுகிறோம்.

ஒப்பீட்டளவில் சிறிய எண்ணிக்கையிலான ஈரானியர்கள் தொழில்நுட்ப ஆதரவை வழங்குகிறார்கள் என்றும் ரஸ்ய வீரர்கள் ட்ரோன்களை இயக்குகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

உக்ரைனில் பொதுமக்கள் மற்றும் குடிமக்களின் உள்கட்டமைப்பை பாதிக்கும் ஆயுதங்களை வழங்குவதன் மூலம் ஈரான் நேரடியாக களத்தில் உள்ளது.

உக்ரைன் மக்களுக்கு எதிராக ஈரான் ஆயுதங்கள் வழங்குவதை அம்பலப்படுத்தவும், தடுக்கவும் அமெரிக்கா எல்லா வழிகளிலும் முயலும் என்று கிர்பி கூறியுள்ளார்.

உக்ரைன் மீதான ட்ரோன் தாக்குதலுக்கு ரஸ்யாவுக்கு உதவியதற்காக மூன்று ஈரானிய ஜெனரல்கள் மற்றும் ட்ரோன் உற்பத்தி நிறுவனமான ஷாஹத் ஏவியேஷன் இண்டஸ்ட்ரீஸ் மீது இங்கிலாந்து தடைகளை அறிவித்துள்ளது.

கடந்த திங்களன்று ரஸ்யா, உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இந்த ட்ரோன்கள் 2-ம் உலகப் போரில் தற்கொலைப் படையாக செயல்பட்ட ஜப்பானிய போர் விமானிகளின் நினைவாக 'காமிகேஸ்' டிரோன்கள் என்று அழைக்கப்படுகின்றன.

கடந்த சில நாட்களாக உக்ரைனின் முக்கியமான உள்கட்டமைப்பைத் தாக்க ரஸ்யா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி வருகின்றது.

உக்ரைன் மின் நிலையங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை ரஷ்யா அழித்துள்ளது. இதையடுத்து உக்ரைனில் மின்சாரம் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.