பாகிஸ்தான் முக்கிய செய்தித் தொகுப்பாளர்களில் ஒருவரான அர்ஷத் ஷெரீஃப், கென்யாவில் சுட்டுக் கொலை

Kanimoli
1 year ago
பாகிஸ்தான் முக்கிய செய்தித் தொகுப்பாளர்களில் ஒருவரான அர்ஷத் ஷெரீஃப், கென்யாவில் சுட்டுக் கொலை

பாகிஸ்தான் முக்கிய செய்தித் தொகுப்பாளர்களில் ஒருவரான அர்ஷத் ஷெரீஃப், கென்யாவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

இவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை தீவிரமாக ஆதரித்தும், இராணுவத்தை கடுமையாக விமர்சித்தும் வந்தவர் ஆவார். 

சில மாதங்களுக்கு முன்பு தேச துரோக வழக்கில் குற்றம்சாட்டப்படிருந்த அர்ஷத், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து வெளியேறி இருந்தார்.

இந்நிலையில், இவர் இங்கிலாந்து மற்றும் துபாய்க்கு சென்று விட்டு கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவுக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

கென்யாவில் தலைநகர் நைரோபி அருகில் உள்ள கஜியாடோ என்ற இடத்தில் ஒரு சாலைத்தடுப்பில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 

இச் சம்பவத்துக்காக வருத்தப்படுவதாக அந்நாட்டு பொலிஸ் தரப்பில் அறிக்கையொன்றும் வெளியானது. அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது, “சம்பவ இடத்தில் திருட்டுப்போன ஒரு காரைப் பிடிப்பதற்காக பொலிஸார் சாலைத்தடுப்பு ஏற்படுத்தி இருந்ததாகவும், அர்ஷாத் ஷெரீப் வாகனம் தடுப்பை மீறி சென்றபோது சுட்டு விட்டதாகவும் பொலிஸ் தரப்பில் வெளியான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.” 

ஆனால் இந்த சம்பவம் பாகிஸதானில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. கராச்சியில் பத்திரிகையாளர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர். 

அர்ஷத் ஷெரீப் தொடர்பில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமாரான இம்ரான் கான் கருத்து தெரிவிக்கையில்,

கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் அர்ஷத் ஷெரீப் இலக்கு வைத்து கொல்லப்பட்டார் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

ஷெரீப் ஒரு "தியாகி" என்றும் அவர் கூறியுள்ளார்.

“தன் உயிருக்கு ஆபத்து இருப்பதை அவர் (ஷரீப்) அறிந்திருந்தார். தனக்குத் திரும்பத் திரும்ப எச்சரிக்கைகள் வருவதை அறிந்திருந்தும் அவர் பின்வாங்கவில்லை. நான் அவரிடம் பின்வாங்கச் சொன்னேன், ஆனால் அவர் பயப்படவில்லை, கடைசியாக, இந்த இலக்கு கொலை இடம்பெற்றுள்ளது. மக்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை, இது இலக்கு வைக்கப்பட்ட கொலை என்று எனக்குத் தெரியும்” எனவும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமாரான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.   

மேலும், அர்ஷாத் ஷெரீப் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது தன்னை மிகுந்த வேதனையில் ஆழ்த்தி இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீவ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அர்ஷாத் ஷெரீப்பின் மனைவி ஜாவேரியா சித்திக் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், " நான் ஒரு அன்பான நண்பரை, கணவரை, எனக்கு பிடித்த பத்திரிகையாளரை இழந்து விட்டேன்" என வேதனையுடன் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.