2024 ஏப்ரல் வரைக்கும் போதுமான சமையல் எரிவாயுவை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது – லிட்ரோ

Mayoorikka
1 year ago
2024 ஏப்ரல் வரைக்கும் போதுமான சமையல் எரிவாயுவை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது – லிட்ரோ

சமையல் எரிவாயுவை ஏற்றிய 2 கப்பல்கள் இன்றும் நாளையும் நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவிக்கின்றது.

3750 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்றும் 3780 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்றுமே நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார்.


2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரைக்கும் போதுமான எரிவாயுவை முன்பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜனவரி மாதம் நடுப்பகுதி வரை 28,000 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவிற்கான முன்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மஞ்சள் நிறத்திலான சிலிண்டர்களில் நீல நிற வர்ணம் பூசி சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்ய முயற்சித்த சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவிக்கின்றது.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் குறிப்பிட்டார்.


லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய சிலிண்டர்கள் ஜனவரி மாதத்தின் பின்னரே சந்தையில் விநியோகிக்கப்படும் எனவும் லிட்ரோ நிறுவன தலைவர் மேலும் கூறினார்.