பசிபிக் பெருங்கடலில் விழுந்த சீன ராக்கெட்டின் உதிரி பாகங்கள்

Prasu
1 year ago
பசிபிக் பெருங்கடலில் விழுந்த சீன ராக்கெட்டின் உதிரி பாகங்கள்

சீனா விண்ணில் சொந்தமாக விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைத்து வருகிறது. இதற்கு தேவையான உபகரணங்களை கடந்த அக்டோபர் 31-ந்தேதி, லாங் மார்ச்-5பி ராக்கெட் மூலம் அனுப்பியது. 

108 அடி நீளமும், 23 டன் எடையும் கொண்ட அந்த ராக்கெட், தான் சுமந்து சென்ற உபகரணங்களை விண்வெளி நிலையத்தில் சேர்த்தது. பின்னர் ராக்கெட்டின் மீதமுள்ள பாகங்கள் பூமியை நோக்கி திரும்பியது. 

அந்த ராக்கெட் பாகங்கள், அதன் சுற்று வட்டப் பாதையில் இருந்து விலகி பூமியில் விழும் அபாயம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் எந்த பகுதியில் சரியாக விழும் என்பதை சீனா உறுதி செய்யவில்லை.

இந்த நிலையில் ராக்கெட்டின் பாகங்கள் வளி மண்டலத்தில் நுழைந்து தெற்கு மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் இன்று அதிகாலை 4.01 மணியளவில் விழுந்துள்ளதாக யு.எஸ்.ஸ்பேஸ்காம் என்ற அமெரிக்க விண்வெளி கழகம் தெரிவித்துள்ளது. 

ராக்கெட் பாகங்கள் பூமிக்கு திரும்பும் போது வளி மண்டலத்தில் எரிந்து சாம்பலாகும். ஆனால் சீன ராக்கெட் பாகங்கள் பூமியில் விழுந்த சம்பவங்கள் நடந்து உள்ளன. 

இதற்கு முன்பு ராக்கெட் பாகங்கள் மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டன. 

ராக்கெட்டின் வடி வமைப்பின்படி பூமியின் எந்த பகுதியில் விழ வேண்டும் என்ற வழிகாட்டி அமைப்போ அல்லது மக்களிடம் இருந்து தொலைவில் விழுவதற்கான அமைப்போ அதில் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. 

சீன ராக்கெட் பாகங்கள் பூமியில் விழுவது இது 4-வது முறையாகும்.