கடவுச்சீட்டு விநியோகம் நாளை முதல் மீண்டும் ஆரம்பம் !

Nila
1 year ago
 கடவுச்சீட்டு விநியோகம் நாளை முதல் மீண்டும் ஆரம்பம் !

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு சீர்செய்யப்பட்டுள்ளதாகவும் கடவுச்சீட்டு சேவைகள்  நாளைய தினம்  (09) முதல் வழமை போன்று மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியூமி பண்டார தெரிவித்துள்ளார்.

கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடவுச்சீட்டுகள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்றைய தினம்  (08) முற்பகல்  இடைநிறுத்தப்பட்டிருந்தது.

திணைக்களத்தின் பத்தரமுல்ல தலைமை அலுவலகம் உட்பட அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் கடவுச்சீட்டு விநியோகிக்கும் செயல்முறை முற்பகல் இடைநிறுத்தப்பட்டது.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்பதுடன் கட்டமைப்பை வழமைக்குக் கொண்டு வரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையிலேயே கடவுச்சீட்டு விநியோகம் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.