சமூகவலைத்தளங்களில் பரவலான குழந்தை இன்று காலை பண்ணையில் மீட்பு!

Mayoorikka
1 year ago
சமூகவலைத்தளங்களில் பரவலான குழந்தை இன்று காலை பண்ணையில் மீட்பு!

 4வயதுப் குழந்தை மீது  கொடூரத் தாக்குதல் வீடியோ ஆதாரங்கள் சமூகவலைத்தளங்களில் பரவிய நிலையில் குறித்த குழந்தை இன்று காலை யாழ்ப்பாண பண்ணைபாலத்தடியில் மீட்கப்பட்டுள்ளது,

இன்று காலை 7.45 மணியளவில் மோசமாக தாக்கப்பட்ட ஊர்காவற்றுறை குழந்தையும் தாயும் திருகோணமலையிலிருந்து தப்பி வந்து யாழ் பண்ணை பாலத்தடியில் செய்வதறியாது நின்ற போது குடும்ப நல உத்தியோகத்தர் திருமதி டினுசாவால் மீட்கப்பட்டார். வட மாகாண சிறுவர் பராமரிப்பு திணைக்களத்திடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பன் பகுதியில் வசித்து வந்த வாய் பேச முடியாத பெண் ஒருவரை அதே பகுதியை சேர்ந்த ஆண் ஒருவர், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார்.

திருமணம் செய்து ஒரு வருடத்தின் பின்னர் அந்த பெண்ணினை விட்டுவிட்டு சென்றுள்ள நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக இருவருக்கும் இடையே தொடர்புகள் எவையும் இருந்ததில்லை. அவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் வந்த தந்தை, சேர்ந்து வாழ்வோம் எனக்கூறி, தாயையும், மகளையும் சுருவில் பகுதிக்கு அழைத்துச் சென்று 5 நாட்களாக அப்பகுதியில் வசித்து வந்துள்ளார்.

சந்தேகநபர் கடந்த 04.11.2022 அன்று, அடிபாடு சம்பந்தமான வழக்கு ஒன்றிற்காக ஊர்காவற்துறை நீதிமன்றத்திற்கு அவர் வருகை தந்துள்ளார்.

பின்னர் அவர், கடந்த 4ம் திகதி, வாய் பேச முடியாதவர்களது சமூக ஊடக குழுமம் (வாட்ஸப்) ஒன்றில் தனது மகளை தாக்கும் காணொளியை வெளியிட்டிருந்தார். அத்துடன் தனது மனைவியும், குறித்த குழந்தையின் தாயுமான பெண்ணின் மரண அறிவித்தல் போஸ்டர் ஒன்றினையும் பகிர்ந்துள்ளார்.

இந்த காணொளியும், மரண அறிவித்தல் போஸ்டரும் சமூக ஊடகங்களில் பரவ ஆரம்பித்த நிலையில் அது ஊர்காவற்துறை பொது சுகாதார வைத்திய அதிகாரியின் கண்களில் எட்டியது.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி, குறித்த காணொளியையும், மரண அறிவித்தல் போஸ்டரையும் ஊர்காவற்துறை நீதிவானுக்கும் ஊர்காவற்துறை பொலிஸாருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சந்தேகநபரை கைது செய்யுமாறு ஊர்காவற்துறை பொலிஸாருக்கு, ஊர்காவற்துறை நீதிவான் உத்தரவிட்ட நிலையில் இன்று காலை சமூக ஊடகங்களில்காணொலியில்  வெளியாகிய குறித்த குழந்தை இன்று காலை சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களால் மீட்கப்பட்டு யாழ் மாவட்ட சிறுவர் நன்னடத்தை பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது