மாவீரர் நாளுக்கான ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில், சிறிலங்கா இராணுவத்தினர் விசாரணை

Kanimoli
1 year ago
 மாவீரர் நாளுக்கான ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில், சிறிலங்கா இராணுவத்தினர் விசாரணை

முல்லைத்தீவு முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்றையதினம் மாவீரர் நாளுக்கான ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில், சிறிலங்கா இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினரால் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் விஜிந்தன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான அமலன் , ஜெகன் ஆகியோரும் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இணைந்து முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் இன்று காலை துப்பரவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

இதன்போது அங்கு சென்ற சிறிலங்கா இராணுவத்தினர் விசாரணைக்காக இராணுவ முகாமுக்கு வருகை தருமாறு ஏற்பாட்டாளர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன்படி இராணுவ முகாமுக்குச் சென்ற ஏற்பாட்டாளர்களை விசாரித்த 592 ஆவது பிரிகேட் முகாமின் அதிகாரி, மாவீரர் நாளினை குறித்த பகுதியில் கடைப்பிடிக்க முடியாது என எச்சரித்ததோடு இப்பகுதி முழுவதும் இராணுவத்துக்கு சொந்தமானது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிரமதானப் பணிகளை மேற்கொண்டாலும், எதிர்வரும் 27 ஆம் திகதி சுடர் ஏற்ற முடியாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், உறவினர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதை தடுக்க வேண்டாமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்ததுடன், தொடர்ந்தும் துயிலும் இல்ல வளாகத்தை துப்பரவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.