வியட்நாம் முகாமில் உயிரிழந்த இலங்கையர் - 4 பிள்ளைகளுடன் மனைவி விடுத்த கோரிக்கை!

Nila
1 year ago
 வியட்நாம் முகாமில் உயிரிழந்த இலங்கையர் - 4 பிள்ளைகளுடன் மனைவி விடுத்த கோரிக்கை!

கனடா செல்ல முயற்சித்த 303 இலங்கை அகதிகள் வியட்நாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இலங்கைக்கு அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

எனினும் மீண்டும் இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என 303 அகதிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கைக்கு அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகுிறது. 

யாழ்ப்பாணம் - சாவக்கச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

வியட்நாமில் இறந்த எனது கணவரின் உடலையாவது அனுப்பிவையுங்கள். நான் எனது பிள்ளைகளுக்கு அப்பா இறந்து விட்டார் எனக்   காட்டவேண்டும் என வியட்நாம் முகாமில் தற்கொலை செய்து கொண்ட யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரனின மனைவி வேணுகா உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

தமது கணவர் வியட்நாம் அகதி முகாமில் வைத்து தற்கொலை செய்துகொண்டதாக வியாழனன்று காலை தூதரகத்திலிருந்து தமக்கு அறிவிக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், தமது பிள்ளைகள் இறுதியாக தந்தையின் உடலைப் பார்க்கும் வகையில் இலங்கைக்கு அனுப்பிவைக்க சகலரும் உதவ வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறுகையில், “எனது கணவர் கனடா செல்லவேண்டும் என்று மிகவும் ஆவலோடு இருந்தார். அதற்காக 18 இலட்சம் ரூபாவரை செலவாகும் என அவர் கூறினார். அவர் எவ்வளவு பணம் செலுத்தினார் என்பது எனக்குத் தெரியாது. அவர் எங்களிடம் இருந்த அனைத்து பொருட்களையும் விற்றுவிட்டார். அத்துடன் தான் கனடா சென்றதும் அனைத்துக் கடன்களையும் கட்டிவிடுவதாகக் கூறினார்.

எனக்கு நான்கு பிள்ளைகள் உள்ளார்கள். இவர்களை எப்படி வளர்த்து ஆளாக்குவேன் என்று எனக்கு தெரியாது. இப்படி ஒரு நிலைமை ஏற்படும் என நான் ஒருபோதும் எண்ணவில்லை. அப்படி என்றால் நான் எனது கணவரை அனுப்பியிருக்க மாட்டேன்.

நான்கு தினங்களுக்கு முன்னர் தூதரகத்திலிருந்து கதைப்பதாகக் கூறி, அவர் தொடர்பான விபரங்களையும் ஆவணங்களையும் கேட்டனர். நான் எதற்கு கேட்கிறீர்கள் என கேட்டபோது, அவர் ஏதோ உட்கொண்ட நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே அவர் இலங்கையர் தானா என்பதை உறுதிசெய்ய வேண்டும் எனத் தெரிவித்தனர். அதனால், அவர் தொடர்பான விபரங்களைக் கொடுத்தேன்.

அதைத் தொடர்ந்து,  அவர் இறந்துவிட்டார் என்பது தெரியுமா என  வியாழக்கிழமை காலை தூதரகத்தில் இருந்து  கேட்டார்கள். நான் தெரியாது என்று கூறினேன். நான் அனைவரிடமும் மன்றாட்டமாக கேட்டுக்கொள்வது என்னவென்றால் இறந்த எனது கணவரின் உடலை அனுப்பிவையுங்கள் என்பதாகும். எனது பச்சிளம் குழந்தைகளுக்கு இறந்த அவரது உடலைக் காட்டவேண்டியது அவசியம் என கண்ணீர்மல்க கூறினார்.

இதேவேளை, தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்படும் 37 வயதான சுந்தரலிங்கம் கிரிதரன் ஆபத்தான நிலையில் வியட்நாம் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் இறுதியில் சிகிச்சை பலனின்றி மரணமானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 8ஆம் திகதி கனடா செல்லும் நோக்கில் தென் சீன கடலில் படகில் தத்தளித்துக்கொண்டிருந்தபோது மீட்கப்பட்ட அகதிகள் வியட்நாம் அகதி முகாம் ஒன்றில் தங்கவைகப்பட்டுள்ளனர். அவர்களில் 303 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையிலேயே சுந்தரலிங்கம் கிரிதரன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!