9A பெற்ற மாணவனுக்கு மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்த நபர் விளக்கமறியலில்
பாடசாலை மாணவன் ஒருவரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று 29 ஆம் திகதி கண்டி பொலிஸ் விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பிட்டிய மேல் தன்னேகும்புர புவல்லே கெதர பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய சஞ்சீவ என்ற பதும் என்ற இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து குண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவனுக்கு தீ வைப்பதற்காக மண்ணெண்ணெய் கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் போத்தல் ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கண்டி, அம்பிட்டிய மீ கன்வன்வ பிரதேசத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவனை எரித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் நேற்று (29) பிற்பகல் அம்பிட்டிய செமினரிவத்தை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னர், 26 வயதுடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றதாகவும், அவரைக் கைது செய்ய நான்கு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளுக்கு அடிமையான சந்தேகநபர் பிரதேசத்தில் பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சந்தேகநபரின் தந்தை சில வருடங்களுக்கு முன்னர் கண்டி மத்திய சந்தைக்கு அருகில் வைத்து படுகொலை செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானமாணவன் தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை படிப்படியாக முன்னேற்றமடைந்து வருவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனின் தந்தை, தனது மகனுடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, பின்னால் இருந்து டார்ச்சுடன் ஒருவர் வந்து நிறுத்தச் சொன்னதாகத் தெரிவித்தார்.
மகனின் உடைகள் மற்றும் உடலில் தீப்பற்றியதால் அவர் கீழே விழுந்து போராடியதாகவும் அதன் போது முச்சக்கர வண்டியில் வைத்தியசாலைக்கு கொண்டு வந்ததாகவும் தந்தை குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இரவில் வரலாம் அல்லது வீடுகளுக்கு தீ வைக்கலாம் என்று கூறும் குழந்தையின் உறவினர்கள், தங்கள் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகக் கூறி இது குறித்து கருத்து தெரிவிக்க மறுக்கின்றனர்.
சந்தேக நபருக்கு எதிராக தகவல் கொடுக்க கிராம மக்கள் கூட மிகவும் அஞ்சுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீக்காயம் அடைந்த மாணவனியின் குடும்பத்தினர் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
கிராமத்தில் யாருடனும் முன்விரோதம் இல்லாததால் எரிக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை என உறவினர்கள் கூறுகின்றனர்.