ஐந்து மாதங்களுக்கு நிறுத்தப்படவுள்ள யாழ்- ரயில் போக்குவரத்து!
குருநாகலின் மஹவயிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் போக்குவரத்து அடுத்த வருடம் ஜனவரி- 15 ம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு நிறுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பழுதடைந்த ரயில் பாதையை மீளமைக்கும் வரை சேவைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ரயில் போக்குவரத்து முழுவதும் தொடர்ந்த போதிலும், ரயில் பாதை பாரியளவில் பழுதடைந்துள்ளதால், பயணத்தைத் தொடர்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் உரிய பராமரிப்புப் பணிகளை 5 மாதங்களுக்குள் செய்து முடிப்பதன் மூலம் யாழ்ப்பாணத்திற்கு சிறந்த ரயில் சேவையை வழங்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
5 மாதங்களுக்குள் சீரமைப்பு பணிகள் முடிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல உறுதியளித்தார்.