இளம் சதுரங்க வீரர் பிரஞானந்தாவுக்கு அர்ஜுனா விருது!
விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான அர்ஜூனா விருதுக்கு, இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரான சதுரங்க வீரர் பிரக்ஞானந்தாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சதுரங்க விளையாட்டில் தனது 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா, கடந்த சில ஆண்டுகளாக சதுரங்க விளையாட்டில் இந்தியாவுக்காக புரிந்து வரும் தொடர் சாதனைகளை மையப்படுத்தி, அர்ஜூனா விருதிற்கு அவரது பெயரை, அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது.
17 வயதான பிரக்ஞானந்தா, இந்தியாவில் நடைபெற்று முடிந்த 44 வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியாவுக்காக ஓபன் பிரிவின் B அணியில் போட்டியிட்டு வெண்கலமும், தனி நபர் போட்டியில் வெண்கலமும் வென்றுள்ளார்.
இந்த ஆண்டில் மட்டும், ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டிகளில், உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை 3 முறை வீழ்தியுள்ளார் பிரக்ஞானந்தா.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்று முடிந்த கிரிபட்டோ கோப்பை மெல்ட் வாட்டர் சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டாம் இடமும், கடந்த வாரம் நடந்து முடிந்த ஆசிய நாடுகளுக்கு இடையேயான சதுரங்க போட்டியில், ஓபன் பிரிவில் போட்டியிட்டு தங்கம் வென்று அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது