சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,321 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது.
கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது.
நேற்று முன்தினம் அங்கு 28,062 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 25,321 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 20,912 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும், 4,409 பேருக்கு மட்டுமே கொரோனா அறிகுறி இருப்பதாகவும் சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கொரோனாவால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
இதுவரை சீனாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,235 ஆக உள்ளது. மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 3,49,938 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



