கோவில்களில் எதற்காக பிரசாதம் கொடுக்கப்படுகிறது தெரியுமா...?

#spiritual #Temple #Hindu #கடவுள் #ஆலயம் #கோவில் #இந்து
Nila
1 year ago
கோவில்களில் எதற்காக பிரசாதம் கொடுக்கப்படுகிறது தெரியுமா...?

இந்து ஆலயங்களில் பூஜை அதாவது சாமி தரிசனம் முடிந்த பின், கோவில் பிரகாரத்தில் ஏதாவது ஒரு இடத்தில், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுவது வழக்கம். இவ்வாறு கோவில்களில், எதற்காக பிரசாதம்  எதற்காக கொடுக்கப்படுகின்றது என தெரியுமா? 

கோவில்களுக்கு சென்றால் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், தக்காளி சாதம், சுண்டல், அவல் , பஞ்சாமிர்தம் என தருவார்கள். நாமும் கூட்டத்தில், அடித்து, பிடித்து முட்டி மோதி முன்னேறி, எப்படியோ வாங்கி, சாப்பிட்டு விடுகிறோம். நாம கோவிலுக்கு போறதே அதற்காக தானே....!

எதற்காக கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதம் தரப்படுகிறது என, நாம் இதுவரை யோசித்ததே இல்லை. 

'பிரசாதம்' என்ற சொல்லுக்கு தூய்மை, மகிழ்ச்சி, பேரின்பம், அமைதி என்று பொருள். வழிபாட்டின் மூலம் இந்த இன்பங்களை மனம் அடைவதே உண்மையான பிரசாதம் எனப்படுகிறது. பக்தியுடன் தினசரி பூஜை செய்து இறைவனின் விக்கிரகத்தை காணும் போது மனதில் ஏற்படும் அமைதியே, உண்மையான பிரசாதம் என வேதங்கள் சொல்கின்றன.

கோவிலில் பூஜைகளின் போதும், வீட்டில் பூஜை செய்தாலும் சுவாமிக்கு நைவேத்தியம் வைத்துதான் வழிபட வேண்டும் என்கின்றன இந்து சாஸ்திரங்கள். நாம் என்ன உணவாக உண்கிறோமோ, அதையே கடவுளுக்கும் படைப்பது பக்தி யோகத்தின் ஒரு அங்கமாக உள்ளது.

'நீ காணிக்கையாக கொடுப்பவை, நீ செய்யும் பிரார்த்தனை, செயல்கள் அனைத்தும் எனக்கே பிரசாதமாக வழங்கப்பட வேண்டும்' என பகவத் கீதை சொல்கிறது. இதனாலேயே இலைகள், மலர்கள், பழங்கள், உணவு, தண்ணீர், பால் என அனைத்தையும் இறைவனுக்கு படைக்கிறோம்.

நாம் இறைவனுக்கு படைக்கும் போது அதை 'நைவேத்தியம்' என்கிறோம். அதுவே திரும்ப நாம் பெறும் போது அதை பிரசாதம் என்கிறோம். சாதாரண சாதமாக இருப்பது, இறைவனின் திருவடியில் வைக்கப்படும் போது அது புனிதமடைந்து பிரசாதம் ஆகிறது. சிலர் பிரசாதம் என்றால், இறைவனுக்காக பிரத்யேகமாக செய்யப்படும் உணவு என நினைக்கின்றனர்.

பிரசாதம் என்ற சொல்லுக்கு தூய்மை, மகிழ்ச்சி, பேரின்பம், அமைதி என்று பொருள். வழிபாட்டின் மூலம் இந்த இன்பங்களை மனம் அடைவதே உண்மையான பிரசாதம் எனப்படுகிறது. பக்தியுடன் தினசரி பூஜை செய்து இறைவனின் விக்ரஹத்தை காணும் போது மனதில் ஏற்படும் அமைதியே உண்மையான பிரசாதம் என வேதங்கள் சொல்கின்றன.

பிரசாதம் என்பது வெறும் உணவுப் பொருள் அல்ல. இறைவனுக்கும் நமக்கும் இடையேயான பந்தத்தின் அடையாளம் என சொல்லப்படுகிறது. இறைவனிடம் உள்ள அமைதி, இன்பத்தை நமது உணர வேண்டும், பெற வேண்டும் என்பதற்காகவே கோவிலில் பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன. இறைவனின் அருள் நமக்குள் நிறைந்து, இறைவனின் குணத்தை நாமும் பெற வேண்டும் என்பதே இதன் தாத்பரியம்.

பிரசாதம் வழங்க காரணம்

ஒருவர் உணவை சமைக்கும்போது, அது சாதாரண உணவாக உள்ளது. அதுவே இறைவனுக்கு படைக்கப்படும் போது பிரசாதம் என்ற புனிதத்துவத்தை பெறுகிறது. இதே போல், சாதாரண குணங்களுடன் இருக்கும் மனிதன், இறைவனிடம் தன்னை ஒப்படைக்கும் போது அவனின் மனம் தூய்மை அடைந்து, ஆன்மிக உணர்வு மேலிட வேண்டும். மனிதனின் வாழ்க்கையும், மனமும் புனிதத்துவத்தை பெற வேண்டும் என்பதை பக்தர்களுக்கு உணர்த்தவே கோவிலுக்கு வருபவர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. .

ஒருவர் கோவிலுக்கு செல்லும் போது, தான் விரும்பும் உணவு தான் பிரசாதமாக கிடைக்க வேண்டும் என யாரும் நினைப்பதில்லை. கோவிலில் என்ன கொடுக்கிறார்களோ அதை பிரசாதமாக, பக்தியுடன் ஏற்றுக் கொள்கிறோம். அதே போல் தான் வாழ்க்கையில் இறைவன் நமக்கு கொடுக்கும் ஒவ்வொன்றையும் நன்றியுடனும், பக்தியுடனும் ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும். இது இறைவன் எனக்காக கொடுத்தது. இறைவனின் கருணையால் எனக்கு கிடைத்தது என நினைத்தால் வாழ்வில் அனைத்தும் இன்பமாக மட்டுமே இருக்கும். நிறைவான மனம் வந்து விடும்.

உணவு, நம்முடைய உடல் என அனைத்தும் இறைவன் கொடுத்த பரிசு. அதற்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும். இதை உணர்த்துவதற்காகவே ஒவ்வொரு முறை சாப்பிடுவதற்கு முன்பும் கடவுளை வழிபட்ட பிறகு சாப்பிட வேண்டும் என்ற வழக்கம் ஏற்படுத்தப்பட்டது.

கோவிலில் என்ன பிரசாதம் கிடைத்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் நாம், இறைவனின் அருளிய இந்த வாழ்வில், எது கிடைத்தாலும் அது இன்பமோ, துன்பமோ எதுவாக இருப்பினும் அதை ஏற்றுக்கொண்டு நிறைவாக வாழ வேண்டும் என்பதே, பிரசாதம் உணர்த்தும் உண்மை.