இளவரசர் ஹரி விமானியாக இருந்த காலத்தில் 25 பேரைக் கொன்றதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல்!

இளவரசர் ஹரி ஆப்கானிஸ்தானில் அப்பாச்சி ஹெலிகொப்டர் விமானியாக இருந்த காலத்தில் 25 பேரைக் கொன்றதை ஒப்புக்கொண்டதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விரைவில் வெளியிடப்படவிருக்கும் ‘ஸ்பேர்’ என்ற அவரது சுயசரிதையை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2007-2008 வரையிலான வான்வழித் தாக்குதல்களில் முதலில் ஆப்கானிஸ்தானில் முன்னோக்கி விமானக் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றிய அவர், 2012-2013ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தாக்குதல் ஹெலிகொப்டரை ஓட்டினார்.
38 வயதான அவர் விமானியாக ஆறு பயணங்களை மேற்கொண்டார், அது மனித உயிர்களை எடுக்க வழிவகுத்தது என்று டெய்லி டெலிகிராப் தெரிவித்துள்ளது.
அவ்வாறு செய்வதில் தனக்கு பெருமையும் இல்லை, வெட்கமும் இல்லை என குறிப்பிட்ட ஹரி, ஒரு பலகையில் இருந்து செஸ் துண்டுகளை அகற்றுவது போல் இலக்குகளை நீக்குவது என விபரித்தார்.
‘எனது எண் 25. இது எனக்கு திருப்தியைத் தரும் எண் அல்ல, ஆனால் அது என்னை சங்கடப்படுத்தவும் இல்லை’ என்று அவர் எழுதினார். அவரது அப்பாச்சி ஹெலிகொப்டரின் மூக்கில் பொருத்தப்பட்ட வீடியோ கேமராக்கள், அவரது பணிகளை மதிப்பீடு செய்ய உதவியது. மேலும் அவர் எத்தனை பேரைக் கொன்றார் என்பதை உறுதியாகக் கண்டறிய முடிந்தது.



