பல நன்மைகள் காத்திருக்கின்றன - ரிஷபம் - 2023 சனிப்பெயர்ச்சி பலன்கள்

#சனிப்பெயர்ச்சி #ராசிபலன் #ரிஷபம் #Astrology #Rasipalan
Nila
1 year ago
பல நன்மைகள் காத்திருக்கின்றன - ரிஷபம் - 2023 சனிப்பெயர்ச்சி பலன்கள்

நிகழும் 2023 ஜனவரி 17-ல் திருக்கணித பஞ்சாங்க பலன்களின்படி மகரத்திலிருந்து கும்ப ராசிக்குப் பெயர்கிறார் சனி பகவான். உங்கள் ராசிக்கு 10-ம் இடத்துக்கு வருகிறார். இந்த மாற்றத்தால் பல நன்மைகள் காத்திருக்கின்றன. வீடு வாங்கும் யோகம் உண்டாகும். பூமி, நிலம் போன்றவற்றில் செய்யும் முதலீடுகள் லாபத்தைத் தரும்.

உங்களின் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டு. அதேநேரம், குடும்பத்தில் சிற்சில சுப விரயங்களும் உண்டு. கல்யாணத்தை எதிர்நோக்கியுள்ள அன்பர் களுக்குத் திருமணப் பேறு கிட்டும். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்.

புதிய முயற்சிகள் பலனளிக்கும். புதிய வியாபாரம் மற்றும் தொழில் விரிவாக்க விஷயங்களில் சற்று யோசித்துச் செயல்படுவது நல்லது. புதிய நண்பர்கள் மூலமாக வரக்கூடிய இந்த வாய்ப்புகளை ஏற்பதில் கவனம் தேவை. ஏனெனில் பின் விளைவுகள் நமக்குச் சாதகமாக இருக்காது. அதேபோல் பணம் கொடுக்கல்வாங்கல் மற்றும் நகை அடகுவைப்பதிலும் எச்சரிக்கையுடன் செயல்படவும்.

தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். அலுவல் மற்றும் வியாபார ரீதியாக மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம். ஆவணி மாதம் பிற்பகுதி முதல் மார்கழி வரையிலும் உள்ள காலம் உங்களுக்குச் சாதகமாக இருக்கும்.

பெண்களுக்கு: நல்ல யோகத்தைக் கொடுக்கப் போகிறார் சனி. குடும்ப ஒற்றுமை ஓங்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக அமையும். ஆரோக்கியம் மேம்படும். பிறந்த வீட்டால் ஏற்பட்ட சொத்துப் பிரச்னை தீரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்குச் சற்று வேலைப் பளு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் எச்சரிக்கை தேவை. சக ஊழியர்களிடத்தில் கவனமாக இருக்கவும்.

மாணவர்களுக்கு: படிப்பில் சற்றுக் கவனக்குறைவு ஏற்படலாம். மறதி, மன சஞ்சலங்கள் அதிகரிக்கும். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஹயக்ரீவரை வணங்க வேண்டும். வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு: தனியார் பணிகளில் இருப்பவர்கள், பணி மாற்றங்களை எதிர்பார்க்கலாம். உயர் பதவி மற்றும் வெளிநாடு செல்லும் யோகம் கைகூடும். நீண்டநாள் எண்ணங்கள் நிறைவேறும் அரசுப் பணியில் இருப்பவர்கள், வங்கி ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.

வியாபாரிகளுக்கு: முதலீடுகள் செய்யும்போது கவனம் தேவை. புதிய நண்பர்களோடு சேர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது, சற்று எச்சரிக்கை தேவை. கூட்டுத்தொழில் முயற்சிகளையும் கவனமாகக் கையாளுங்கள். நிதானமான செயல்பாடுகள் வெற்றி தரும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் அருகிலுள்ள ஆலயங்களுக்குச் சென்று அனுமனைத் தரிசித்து வழிபடலாம். சக்கரத்தாழ்வாருக்குத் திரு மஞ்சனமும், சனிப் பிரதோஷத்தில் நந்திதேவருக்கு அபிஷேகமும் செய்வது விசேஷம்.