2023ம் ஆண்டு சனிப்பெயர்ச்சியில் புதிய வெளிச்சத்தைக் காணப்போகும் துலா ராசியினர்

#துலாம் #சனிப்பெயர்ச்சி #ராசிபலன் #Astrology #Rasipalan
Nila
1 year ago
2023ம் ஆண்டு சனிப்பெயர்ச்சியில் புதிய வெளிச்சத்தைக் காணப்போகும் துலா ராசியினர்

எதிர்வரும் 17.01.2023 அன்று நிகழவுள்ள சனிப்பெயர்ச்சி பலனின்படி துலாம் ராசி நேயர்களுக்கு வரப் பிரசாதமாக அமையப்போகிறது. இதுவரை 4-ம் இடத்தில் அமர்ந்து, பலவிதத்திலும் மன உளைச்சலை அளித்த சனி பகவான், இப்போது 5-ம் இடத்துக்கு வந்து அமரப்போகிறார். பூர்வபுண்ணிய ஸ்தானம் அது. நீங்கள் இப்போது புதிய பாதையை, புதிய வெளிச்சத்தைக் காணலாம்.

எண்ணிலடங்கா வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமாத் துறை மற்றும் அரசுப் பணி செய்பவர் களுக்குப் பேரும் புகழும் கிடைக்கும். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு வாழ்க்கைநிலை உயரும். தன லாபம், மகிழ்ச்சி, குடும்ப ஒற்றுமை, சமுதாயத்தில் நல்ல அங்கீகாரம் ஆகியவற்றுக்குத் தயாராக இருக்கலாம் நீங்கள். `துணிவே துணை' என்று வாழ்ந்த நீங்கள், `எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்...' என்ற வரிகளுக்கு ஏற்ற அனுபவங்களைச் சந்திப்பீர்கள்.

பெண்களுக்கு: வருங்காலம் உங்களுக்குப் பொற்காலம். பெரியவர்களின் உடல் ஆரோக்கியம் பெறும். மருத்துவச் செலவுகள் குறையும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் பாக்கியம் உண்டு. திருமணம், மறுமணம் மற்றும் குழந்தைப் பேறு இவற்றில் இருந்த தடங்கல்கள் நீங்கும். குழந்தைகளுடைய பாசத்தைப் பரிபூரணமாகப் பெறுவீர்கள். பணி மாற்றம், உயர் பதவி, தனலாபம் ஆகியவை சார்ந்து உங்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

மாணவர்களுக்கு: படிப்பில் ஆர்வம் பெருகும். தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் வாய்ப்பு உண்டு. ஆசிரியர் உறுதுணையாக இருப் பார். விளையாட்டுத் துறை, கலைத் துறை மாணவர்களுக்குச் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும்; தக்கபடி பயன்படுத்திக்கொள்ளவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு: கனவுகள் மெய்ப்படும் காலம் இது. அலுவலகத்தில் உள்ள பிரச்னைகள், வழக்குகள், விசாரணைகள் அனைத்தும் உங்களின் முயற்சியால் சாதகப் பலன்களைத் தரும். குலதெய்வத்தின் அருளால் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். புதிய வேலைக்கான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டு.

வியாபாரிகளுக்கு: இந்த சனிப்பெயர்ச்சி துலாம் ராசியைச் சேர்ந்த வியாபாரிகளுக்கு நல்லதொரு முன்னேற்றத்தைக் கொடுக்கும். இதுவரையிலும் வாட்டி வதைத்த கடன் பிரச்னைகள் தீரும்; கூட்டுத் தொழிலில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கும். புதிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாக பொருள் உதவி கிடைக்கும்; அதன் மூலம் நீங்கள் முன்னெடுக்கும் வியாபாரத் தொடக்கம் சிறப்பாக அமையும். ரியல் எஸ்டேட், இரும்புத்தொழில், பஞ்சு ஆலைகள், ஜவுளித் தொழில் ஆகியவை நல்ல லாபம் தரும். எனினும் பங்குச் சந்தை, தங்கம், வெள்ளி தொடர்பான வியாபாரம் செய்யுன் அன்பர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படவும்.

பரிகாரம்: வியாழக்கிழமைகள், அமாவாசை தினங்களில் அன்னதானம் செய்வது சிறப்பு. நரசிம்மர் வழிபாடு நன்மை அளிக்கும். சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து, துளசி மாலை சாற்றி வழிபடுவதால், பிரச்னைகள் நீங்கி வாழ்வில் மலர்ச்சி உண்டாகும்.