இன்றையவேத வசனம் 17.01.2023: மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கிஇ உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்

#Bible
Prathees
1 year ago
இன்றையவேத வசனம் 17.01.2023: மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கிஇ உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்

இன்று அநேக வாலிபர்கள் எதிர்பாலினரின் ஈர்ப்பு, இச்சை காரணமாக விழுந்து தன் பரிசுத்தத்தை இழந்து விடுகிறார்கள்.

நாம் வாழும் இந்த உலகில், இரசனை, இச்சை இவ் இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது.
நீங்கள் ஒரு தெருவில் நடந்து செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், அங்கு ஒரு வீட்டில் ஒரு அழகான பூ பூத்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

அந்தப் பூவை ரசிப்பது ரசனை. ஆனால், அந்தப் பூவை பறித்து தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது இச்சை.

அதேப்பேல, நீங்கள் ஒரு எதிர்பாலினரை பார்க்கும் பொழுது, அதாவது, ஒரு பெண் ஓரு ஆணைப் பார்க்கும் போது, அல்லது ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்க்கும்போது, அந்த ஆணையாவது, அல்லது அந்த பெண்ணையாவது தன் பெண் தோழி ஆக்கிக்கொள்ள வேண்டும். அல்லது மனைவியாக்கிக் கொள்ள வேண்டும். நான் அடைய வேண்டும் என்று நினைப்பது இச்சை.

இன்று கிறிஸ்துவை அறிந்த நிறைய வாலிபர்களும்கூட அழகற்ற பெண்ணை பார்த்தால் யோசேப்பை போல் தப்பித்துக் கொள்வதும், அழகான பெண்ணைப் பார்த்தால் தாவீதைப் போல அடுத்தவன் மனைவியாய் இருந்தாலும் எடுத்துக்கொள்ள விரும்புகிறவர்களாய் இருக்கிறார்கள்!

கர்த்தர் பழைய ஏற்பாட்டில் விபச்சாரம் செய்யக் கூடாது என்று கட்டளை கொடுத்திருக்கிறார். புதிய ஏற்பாட்டில் இச்சையோடு பார்த்தாலே விபச்சாரம் என்கிறார்!!

இயேசு கிறிஸ்து தெளிவாய் சொல்லுகிறார்:- நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. (#மத்தேயு 5:28)
இந்த செய்தியை எழுதுகிற நான் வாலிப வயதில் இருப்பதினால் என் அனுபவத்திலேயே சில காரியங்களை எழுதுகிறேன்.

நான் இரட்சிக்கப்பட்ட புதிதில் எனக்கும் இதே போராட்டம் இருந்தது. நான் இந்த இச்சையை ஜெயிக்க கர்த்தர் எனக்கு கற்றுக்கொடுத்த ஒரு காரியம் உபவாசம். வாரத்தில் ஒரு முறை இதற்காக உபவாசம் இருந்து ஜெபித்தேன் கர்த்தர் எனக்கு அற்புதமாய் ஜெயம் தந்தார்
எனக்கு ஜெயம் தந்த இயேசுகிறிஸ்து உங்களுக்கும் ஜெயம் கொடுக்க விரும்புகிறார்!

யோபு சொல்கிறார்:- என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி? (#யோபு 31:1)
யோபுவைப் போல, நீங்களும் தேவனோடு உடன்படிக்கை செய்து உங்கள் கண்களைப் பரிசுத்தமாய் காத்துக் கொள்ளுங்கள்.. ஆமென்!! அல்லேலூயா!!!

#சங்கீதம் 119:37
மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.