எரிசக்தி செயலாளர் மற்றும் PUCSL இன் தலைவர் ஆகியோரை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அழைப்பு
இலங்கையின் மின்சாரம் மற்றும் எரிசக்தி செயலாளர் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோர் நாளை புதன்கிழமை (25) முற்பகல் 10:30 மணிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
உயர்தரப் பரீட்சையின் போது மின்சாரம் தடைபடுவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி செயலாளர் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நேற்று திங்கட்கிழமை ஆரம்பமானநிலையில், நாளாந்த மின்வெட்டு இரண்டு மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்படும் என இலங்கை அமைச்சரவைப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன,உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில் மாலை 4 மணிக்குப் பின்னரே இரண்டு மணித்தியால மின்வெட்டு இடம்பெறும் என குறிப்பிட்டார்.
பரீட்சைக்கு அமர்கின்ற மாணவர்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்த அவர், இரண்டு மணித்தியால மின்சாரத்தடை கட்டம் கட்டமாக இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.