அசாம் மாநிலத்தில் 24 மணிநேரத்தில் 2,044 பேர் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

Mani
1 year ago
அசாம் மாநிலத்தில் 24 மணிநேரத்தில் 2,044 பேர் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

அசாமில் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது.அங்கு பெண்களுக்கு உரிய வயதிற்கு முன்பு திருமணம் செய்வதையும், கருத்தரிப்பதையும் தடுக்கும் விதமாக புதிய சட்டத்தை கொண்டுவந்துள்ளது,
இந்த புதிய உத்தரவின் பேரில் அசாம் காவல் துறை மாநிலம் முழுவதும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் 18 வயது குறைவான பெண்களை திருமணம் செய்தவர்கள் மீது தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

14 வயதுக்கு குறைவான பெண்களை திருமணம் செய்யும் நபர்கள் மீது போக்ஸோ சட்டம் பாயும் எனவும், 14-18 வயது பெண்களை திருமணம் செய்யும் நபர்கள் மீது குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் பாயும் என அசாம் அரசு சில நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டது.அதன்படி, 24 மணிநேரத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமணம் நடத்தி வைத்த புரோஹிதர், இஸ்லாமிய மதகுரு உள்ளிட்ட 52 பேரும் இந்த நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் இதுவரை 2,044 பேர் கைது செய்யப்பட்டு இவர்கள் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டம், போக்சோ சட்டம் ஆகியவை போடப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து கைது நடவடிக்கைக்கு எதிராக பல இடங்களில் போராட்டம் நடத்தப்படுகிறது. குறிப்பாக பெண்கள் தங்களின் வாழ்வாதாரம் பறிபோவதாக போராட்டம் நடத்திவருகின்றனர்.