பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இனம், மதம் பேதமின்றி ஒன்றிணைவதே சிறந்த வழி - விசேட உரையில் ஜனாதிபதி!
ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
“இன்று நாம் வரலாற்றில் ஒருபோதும் கண்டிராத பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம். அண்மைக்கால வரலாற்றில் இவ்வாறானதொரு பாரதூரமான நிலையை நாம் எதிர்கொண்டதில்லை.
நமக்கு ஏன் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டது? இந்த நிலைக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்?
நாம் உண்மையைப் பேசுவோம். இந்த நிலைக்கு நாம் அனைவரும் குறைவாகவோ அதிகமாகவோ பொறுப்புக் கூற வேண்டும். நாம் யாரும் விரல் நீட்டி ஒருவரை ஒருவர் குற்றம் சொல்ல முடியாது.
நாம் ஆரம்பத்திலிருந்தே தவறு செய்தோம். அந்த தவறை சரி செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டன. பாடுபட்டோம். ஆனால் நூறு சதவீதம் சரி செய்ய முடியவில்லை.
வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதற்காக அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டது. காணி விடுவிப்பு, கைதிகளின் விடுதலை போன்ற நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளோம். ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இந்த நாட்டை பிளவுபடுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
எனவே நாம் அனைவரும் ஒன்றாக முயற்சி எடுப்போம். ஒற்றிணைந்து அர்ப்பணிப்போம்.
ஒரு தாயின் பிள்ளைகள் போல் ஒன்றுபடுவோம்.
நமது நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2048 ஆம் ஆண்டின்போது எமது நாட்டை உலகின் தலைசிறந்த நாடாக மாற்றுவோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.