இந்த முறையில் கோதுமைத் தோசை செய்து பாருங்கள். இது போன்ற தோசை எங்கும் கிடைக்காது.

#சமையல் #கோதுமை #உணவு #தகவல் #லங்கா4 #Cooking #Wheat flour #meal #information #Lanka4
இந்த முறையில் கோதுமைத் தோசை செய்து பாருங்கள். இது போன்ற தோசை எங்கும் கிடைக்காது.

கோதுமை தோசை என்றால் பொதுவாக பெரும்பாலானோர் விரும்பமாட்டார்கள். காரணம் தோசை மொறுமொறுவென்று இருக்காது. ருசியாகவும் இருக்காது. அதுமட்டுமில்லாமல் கோதுமை தோசை ஒட்டுந்தன்மையுடையதாக காணப்படும்.

பின்வரும் முறையில் கோதுமைத்தோசை செய்தால் சாதாரண உழுந்துத் தோசை போன்று மொறு மொறு வென்று இருக்கும். 

தேவையான பொருட்கள்.

  • கோதுமை மாவு – 1 1/2 கப்
  • அரிசி மாவு – 1/4  கப்
  •  உப்பு – தேவையான அளவு
  • சமையல் எண்ணெய் – 1 தேக்கரண்டி
  • கடுகு – 1/2 தேக்கரண்டி
  • சீரகம் – 1/2 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 3
  • நறுக்கிய  இஞ்சி – 1/2 தேக்கரண்டி
  • கருவேப்பிலை – சிறிதளவு
  • நறுக்கிய பெரிய வெங்காயம் – 1
  • நறுக்கிய சிறிய தக்காளி – 1
  • நறுக்கிய கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை:

படி:1
முதலில் ஒரு கிண்ணத்தில் 1 1/2 கோதுமை மாவு சேர்த்து கொள்ளல் வேண்டும். பின்னர் அதனோடு அரசி மாவு 1/4 கப் சேர்த்து கொள்ளுங்கள். அரசி மாவு சேர்ப்பதால் தோசை மொறுமொறுவென்று இருக்கும். பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும். கோதுமை தோசைக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும். மாவு கலந்த பிறகு அப்படியே ஒரு 15 நிமிடம் இருக்கட்டும். 

படி:2
அடுத்து அடுப்பை பற்ற வைத்து கடாயை வைத்து கொள்ளுங்கள். அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து கொள்ளுங்கள். கடுகு பொரிந்ததும் சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய இஞ்சி, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து வதக்குங்கள். 

படி:3
வெங்காயம் சிவந்த நிறம் வந்தவுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்குங்கள். தக்காளி சுருங்கிய பதம் வந்தவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்குங்கள். அதனுடன் நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். 

படி:4
இப்போது கோதுமை மாவுடன் வதக்கி வைத்த கலவையை சேர்த்து கொள்ளுங்கள். அடுத்து அடுப்பில் தோசை கல்லை வைத்து கலந்து வைத்த மாவை தோசையாக ஊற்றுங்கள்.

தோசை வெந்ததும் இறக்கி பரிமாறுங்கள். சாப்பிடுபவர்கள் உங்களிடம் இது கோதுமை தோசையென்றே கூறமாட்டார்கள். அந்த அளவிற்கு இது சாதாரண உழுந்துத் தோசை போன்று சுவையாக இருக்கும்.