அவர்கள் மட்டும் இருந்திருந்தால்.....!
சுதந்திரம் கேட்டோம் சுடுகாடானோம்
விடுதலை கேட்டோம் காணாமல் ஆக்கப்பட்டோம்
14 வருடங்கள் கடந்து விட்டது
நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு
காலம் உருண்டோடி விட்டது..
எண்ணிப் பார்க்கக் கூட முடியவில்லை அதன் வலிகள்
கொல்லப்படுவோம் என்று நினைக்கவில்லை..
பங்கருக்குள் ஒளிவோம் என்றும் எண்ணவில்லை...
புதைகுழிகள் இன்றி மண்ணில் புதையுண்டோம்
விதைகளாக்கப்பட்டுள்ளோம் நம் மண்ணில்
வலிகள் இன்னும் மாறவில்லை
வடுக்கள் என்றும் மறையவில்லை
சுதந்திரம் கேட்டு சுதந்திரமாய்
நடமாடி முடியவில்லை
இப்போது
பயமின்றி வாழ வெளியில் வரமுடியவில்லை...
பயந்து பயந்து நகைகளை பதுக்க வேண்டியுள்ளது...
வாள் வெட்டும்...கொலையும் கொள்ளையும்
மலிந்து
பிள்ளை பிடிகாரருக்கு பயந்து
பிள்ளைகளின் சுதந்திரத்தை தேடி அலைகிறோம்
போதைப்பொருளால் எதிர்காலத்தை
தொலைத்துள்ள
இளம் பிஞ்சுகளின் வாழ்க்கையை
எண்ணிப் பார்க்க முடியவில்லை..
கற்பழிக்கப்படும் சிட்டுக்களின் பாதுகாக்க முடியவில்லை..
அவர்கள் இருந்திருந்தால்
அவர்கள் மட்டும் இருந்திருந்தால்
இப்போதும் எண்ணத் தோன்றுகிறது...
காலத்திற்கு காலம் மாறும் மாற்றம் ஏற்க மறுத்து நிற்கிறது...
விடிவு கிடைக்க வாய்ப்பில்லை...
விடுதலை கேட்க யாருமில்லை
இருட்டோடு வாழப் பழகத்தான் வேண்டும்...
ஏனெனில் அழித்து விட்ட இறுமாப்பு
இன்னும் ஒழியவில்லை..