கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது: பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்

#SriLanka #Arrest #Parliament #Gajendrakumar Ponnambalam #Defense # Ministry of Defense
Mayoorikka
3 years ago
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது: பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்ய நேரிடும் என்பதை சபாநாயகருக்கு கடந்த ஐந்தாம் திகதி அறிவித்துள்ளோம். 

 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்படும் போது சபாநாயகரின் அனுமதி பெற வேண்டுமா அல்லது சபநாயகருக்கு அறிவிக்க வேண்டுமா? என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கேள்வி எழுப்பினார்.

 பாராளுமன்ற நிலையியல் கட்டளை, பாராளுமன்ற சம்பிரதாயம் ஆகியவற்றில் இருவேறுபட்ட முறையில் இவ்விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 ஆகவே இந்த விடயம் தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடுவது சிறந்ததாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (9) வாய்மொழி விடைக்கான வினாக்களின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை தற்போது பிரச்சினைக்குரியதாகியுள்ளது.

 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பாரிய விமர்சனம் எழுந்துள்ளது. கட்சி தலைவர்கள் கூட்டத்திலும் இந்த விடயம் தொடர்பில் உரையாடினோம். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விவகாரத்தில் பொலிஸார் செயற்பட்ட விதம் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளது. 

கஜேந்திரகுமாருக்கு எதிராக பொலிஸார் வெளிநாட்டு பயணத்தடை பெற்றுக்கொண்டு, மறுநாள் (கைது செய்யப்படுவதற்கு மறுநாள்) வாக்குமூலம் வழங்க வருகை தருமாறு அறிவுறுத்தி விட்டு பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துக் கொள்ள வருகை தரவிருந்தவரை கைது செய்தமை தொடர்பில் எமது கடுமையாக அதிருப்தியை சபாநாயகரிடம் வெளிப்படுத்தினோம்.

 பொலிஸாரின் சுதந்திரம் தொடர்பில் விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளதை அவதானித்தோம். ஆகவே இந்த தவறு திருத்திக் கொள்ளப்பட வேண்டும். 

இந்த நிலை எவருக்கும் ஏற்படலாம்.மனித படுகொலை உட்பட பாரதூரமான குற்றங்களுக்கு இவ்வாறு செயற்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மறுநாள் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தருமாறு அறிவுறுத்தி விட்டு கைது செய்யப்பட்டமை முறையற்றது என்றார்.

 இதன்போது எழுந்து உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இந்த சம்பவம் தொடர்பில் சபைக்கு விரிவாக அறிவுறுத்தியுள்ளேன். நான் ஊடகங்களிடம் கதைக்கவில்லை.

 பாராளுமன்றத்தில் உரையாற்றினேன். சபையில் ஆற்றிய உரை ஊடகங்களில் செய்தியாக வெளியாகியுள்ளன. கடந்த எட்டாம் திகதி வாக்குமூலம் வழங்க பொலிஸ் நிலையத்துக்கு வருகை தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு அறிவுறுத்தப்பட்டதாக குறிப்பிடப்படுவது பொய். யாழ்ப்பாணம் மருதங்கேணி பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க வருகை தருமாறு உரிய பொலிஸ் அதிகாரி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் குறிப்பிட்ட போது அவர் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தன்னால் வருகை தர முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

 அதனை தொடர்ந்து கடந்த ஆறாம் திகதி கொள்ளுப்பிட்டி பொலிஸ் ஊடாக எட்டாம் திகதி வருகை தருமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் அந்த அறிவிப்பை ஏற்கவில்லை.

பொலிஸ் நிலையத்துக்கு வருகை தருமாறு அறிவுறுத்தப்பட்ட பத்திரம் தமிழ் மொழியில் இல்லாத காரணத்தால் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதை ஏற்க மறுத்துள்ளார். அதனை தொடர்ந்து இரண்டாவது முறை மீண்டும் அறிவித்தலை கையளிக்க அவரது வீட்டுக்கு உரிய பொலிஸ் அதிகாரிகள் சென்றுள்ளனர். 

அப்போது அவரது வீட்டு நுழைவாயிலில் உள்ள பாதுகாவலர்கள் வீட்டில் யாரும் இல்லை,ஆகவே தங்களால் எந்த பத்திரங்களையும் ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். ஆகவே 8 ஆம் திகதி பொலிஸ் நிலையத்துக்கு வருகை தருமாறு பொலிஸார் உத்தியோகபூர்வமாக அவருக்கு அறிவிக்கவில்லை.

 வருகை தருமாறு அழைப்பு விடுத்து அதனை ஏற்காத போது பொலிஸ் குழுவினர் கொழும்புக்கு வருகை தந்து அவரை தேடிச் சென்றார்கள்.இதுவே நடந்தது. அத்துடன் பாராளுமன்றத்துக்கு வருகை தரும் போது அவரை கைது செய்யவில்லை என்றார்.

 இதன்போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இந்த சம்பவம் ஊடக பிரசாரமாக இடம்பெற்றது. அந்த இடத்துக்கு ஊடகவிலளார்கள் சென்றுள்ளார்கள். 

ஊடகங்கள் முன்னிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொலைபேசி ஊடாக சபாநாயகரிடம் உரையாடியுள்ளார். நாங்களும் அதை அவதானித்தோம். நான் பாராளுமன்றத்துக்கு வருகை தந்துக் கொண்டிருக்கிறேன் என்று சபாநாயகரிடம் குறிப்பிட்டுள்ளார். இதனை பொலிஸ் அதிகாரிகள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

 பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சபாநாயகர் தரப்பின் செயற்பாடு கவலைக்குரியதாக உள்ளது. இருப்பினும் பொலிஸ்மா அதிபர் ஒருசில விடயங்களை தெரிந்துக் கொள்ள வேண்டும். உரிய சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அவர் உரையாற்றுவதை தடுக்கும் வகையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. ஆகவே இது பாரதூரமானது என்றார்.

 இதன்போது மீண்டும் உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் நடந்ததையே நான் குறிப்பிடுகிறேன் எவர் தரப்புக்கும் சார்பாக பேசவில்லை. 

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்ய நேரிடும் என்பதை சபாநாயகருக்கு கடந்த ஐந்தாம் திகதி அறிவுறுத்தியுள்ளோம். ஏழாம் திகதி கைது செய்யப்பட்டார்.

 இதன்போது எழுந்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்படும் போது பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் சபாநாயகரிடம் சுட்டிக்காட்டினார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.கைது செய்யப்படும் போது சபாநாயகரின் அனுமதியை பெற வேண்டும் என்பதை பொலிஸாருக்கு தெரியப்படுத்துங்கள் என்றார்.

 இதன்போது எழுந்து உரையாற்றிய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்படும் போது சபாநாயகரின் அனுமதி பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதா அல்லது. அவருக்கு அறிவுறுத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதா ? என கேள்வி எழுப்பினார்.

 இதன்போது எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன பாராளுமன்ற சம்பிரதாயம் உள்ளது.

நிலையியல் கட்டளை உள்ளது,ஆகவே இவ்விடயம் தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடுவது சிறந்ததாக அமையும் என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4