தேர்தலைப் பற்றி பேசினால் ஜனாதிபதிக்கு பயம் பிடித்துள்ளது: சுமந்தரன்

#SriLanka #Sri Lanka President #M. A. Sumanthiran
Mayoorikka
2 years ago
தேர்தலைப் பற்றி பேசினால் ஜனாதிபதிக்கு பயம் பிடித்துள்ளது: சுமந்தரன்

இலங்கையில் தேர்தலை நடத்துவதற்கான நோக்கம் ஜனாதிபதியிடம் இல்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு நேற்றைய தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிபரிடம் கோரிக்கை முன்வைத்த போதிலும் அதனை அவர் நிராகரித்தாக சுமந்திரன் கூறுகிறார்.

 வடமராட்சி குடத்தனையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 “நேற்றையதினம் ஜனதிபதி செயலகத்தில் ஜனதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக உரையாடுவதற்கு என்று கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

 அந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள். அந்தக் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டிருந்தேன். இந்தக் கூட்டத்தில் அதிகாரப்பகிர்வு என்று பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி அவர் பேசியிருந்தார்.

 எங்களுக்கு அதில் ஆட்சேபனை இருக்கவில்லை, இருக்கின்ற அதிகாரங்களை அரசியலமைப்புக்கு உகந்த வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த என்று சொல்லுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. 

அது அரசியலமைப்பில் இருக்கின்ற விடயம். சம்பந்தன் ஆரம்பத்திலேயே எங்களுடைய கருத்தை வெளிப்படையாக சொல்லி இருந்தார். அதாவது தொடர்ந்து நாங்கள் சந்தித்து சந்தித்து பேசுகின்றோமே அல்லாது எதுவும் உருப்படியாக நடக்கவில்லை. 

உடனடியாக நடைமுறையில் இந்த அதிகாரப் பகிர்வை நாங்கள் காண வேண்டும். இல்லை என்று சொன்னால் உள்ளக அதிகாரப் பகிர்வுக்கு நாங்கள் தயாராக இருக்கின்ற அதே வேளையில், அது கிடைக்காவிட்டால் வெளியகமாக எங்களுடைய சுயநிர்ணய உரித்தை கேட்பதற்கு நாங்கள் தயாராகுவோம் என்று ஐயா சொன்னார் . 

அதற்கு ஜனாதிபதி பதில் சொல்லியிருக்கவில்லை. ஆனால் மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் காலம் கடத்திக் கொண்டு மாகாண சபை முறைமை பற்றி பேசுவது முறையற்றது என பலர் சுட்டிக் காட்டிய போது, நான் தற்போது கொண்டு வந்திருக்கின்ற தனிநபர் சட்டமூலத்திற்கு அமைவாக மாகாண சபை தேர்தல் வைக்க முடியும் என சுட்டிக்காட்டிய போது தான் அதிபர் சொன்னார் தேர்தல் இப்போது தேவையில்லை. 

அதிகாரப் பகிர்வு எப்படி இருக்க வேண்டும் என்று நாங்கள் பேசுவோம் என சொன்னார். அந்த வேளையில் தான் நாங்கள் வலியுறுத்தினோம். இல்லை தேர்தலும் நடாத்தப்பட வேண்டும். இதை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி இருக்கின்றோம் என்று சொன்னபோது, நீங்கள் இந்த இரண்டிலே ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். 

ஒன்று தேர்தல் அல்லது அதிகாரங்கள் பகிர்வது இரண்டையும் ஒரே நேரத்தில் கேட்க முடியாது என திட்டவட்டமாக சொன்னார். இது ஒரு முரண்பட்ட கருத்து அல்ல இரண்டும் ஒரே திசையில் தான் இருக்கிறது. அப்படி இருக்கின்ற போது நீங்கள் ஏன் ஒன்று மட்டும் தான் கேட்க வேண்டும் என சொல்கிறீர்கள் என்று நான் அவரோடு வாக்குவாதப்பட்ட போது, முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சொன்னார் தேர்தல் தேவையில்லை அதிகாரப் பகிர்வு பற்றி பேசுவது தான் முக்கியம் என்று சொன்னார்.

 அந்தக் கருத்தோடு நாங்கள் உடன்படவில்லை. ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பாக மூன்று கட்சித் தலைவர்களும் அங்கே இருக்கின்ற போது அவர்களின் அனுமதியோடு நான் விக்னேஸ்வரன் ஐயா சொன்னதை மறுத்துரைத்தேன்.

 பல வருடங்களாக கால தாமதமாகி இருக்கிறது மாகாண சபைத் தேர்தல், ஆகவே அது உடன் நடத்தப்பட வேண்டும். தேர்தல் நடத்துவதால் அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக கதைக்க கூடாது என்று எங்கேயும் இல்லை, ஆகவே ஜனாதிபதி தர்க்க ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கருத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

 நாங்கள் இரண்டையும் கேட்கின்றோம் ஒன்று சொல்லியபோது, அப்படியானால் நாங்கள் கூட்டத்தை முடித்துக் கொள்வோம் என சொல்லிவிட்டு ஜனாதிபதி உடன் வெளியில் போய்விட்டார்.

 ஆகவே கூட்டம் நேற்று அரைகுறையுடன் நிறைவடைந்திருக்கிறது. தேர்தலைப் பற்றி பேசினால் ஜனாதிபதிக்கு பயம் பிடித்து இருக்கிறது” என தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4