இலங்கை ஏனைய நாடுகளுக்கு சுமையாக இருக்கக் கூடாது: ஜனாதிபதி

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #Development
Mayoorikka
2 years ago
இலங்கை ஏனைய நாடுகளுக்கு சுமையாக இருக்கக் கூடாது: ஜனாதிபதி

இலங்கை இனிமேலும் ஏனைய நாடுகளுக்கு சுமையாக இருக்கக் கூடாது என்றும் பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகள் செயற்பட்டமை போன்று, உள்நாட்டு வளங்களைப் பயன்படுத்தி ஒரு நாடாக நாமும் தனித்து முன்னேற முயற்சிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 இலங்கையின் பொருளாதாரத்தை முழுமையாக மறுசீரமைக்க எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் பாதையை பின்பற்றி, போட்டித்தன்மைமிக்க, புதிய சந்தை வாய்ப்புகளையும், வெளிநாட்டு முதலீடுகளையும் ஈர்க்கத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 “இலங்கையின் நிலையான அபிவிருத்தி நோக்குநிலை” என்ற தலைப்பில் அலரி மாளிகையில் செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்ற நிபுணர் மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில் 

“நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் நாம் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து இங்கு குறிப்பிடப்பட்டது. நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அழைப்பு விடுத்துள்ள கலந்துரையாடலில் நானும் பங்கேற்கிறேன். 

 நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை நாம் இப்போது அடைந்து வருவதோடு, அதன் பிரதிபலன்களும் பாராட்டுக்குரியவை. ஐரோப்பாவின் பொருளாதாரம் இன்றளவிலும் சரிவை எதிர்கொள்கிறது.

 மறுமுனையில் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டிருந்தாலும், அதிர்ஷ்டவசமாக அமெரிக்கா இருந்த நிலையை விடவும் தற்போது ஓரளவு முன்னேற்றம் கண்டுவருகிறது. 

சீனா இன்னும் மீண்டு வரவில்லை. எனவே, உலகப் பொருளாதார முன்னேற்றம் தடைப்பட்டுள்ளதுடன், அதனால் பெரும் பாதிப்புக்களையும் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

 அவ்வாறென்றால், நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு நாம் எவ்வாறு நிதியைப் பெற்றுக்கொள்வது? மற்றும் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளைத் தணிக்கவும் உலகளாவிய நிதிக் கடன் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நிதி நிவாரணங்களை பெற்றுக்கொள்ளும் முறைமைகளை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். 

அந்த இலக்குகளை அடைவதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும். 2019 இல் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைய, மொத்தத் தேசிய உற்பத்தியில் 9% சதவீதத்தை மாத்திரம் வைத்திருப்பதே எமது தேவையாக இருந்தது. 

ஆனால் தற்போது, இந்தப் பின்னணியிலும், காலநிலை மாற்ற இலக்குகளுக்காக நாம் நிதியை ஒதுக்க வேண்டியுள்ளது.

 இலங்கை எதிர்கொண்ட கடன் நெருக்கடியின் விளைவாக, இந்நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக மறுசீரமைக்க நாங்கள் எதிர்பார்ப்பதோடு, அதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்து வருகிறோம். 

 அதற்காக தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் பின்பற்றிய பாதை குறித்து நாம் கவனம் செலுத்தியுள்ளதோடு, இதன்போது உயர் போட்டித்தன்மையுடைய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக எம்மால் மாற முடியும். நாம் தொடர்ந்தும் முன்பு இருந்தது போன்று சிறிய பொருளாதாரமாக செயல்பட முடியாது.

 நாம் நமது பொருளாதாரத்தை விஸ்தரிக்க வேண்டும். இதற்காக புதிய தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்த வேண்டும். மேலும், இதற்குத் தேவையான வெளிநாட்டு முதலீடு மற்றும் மூலதனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

 நமது நாடு இந்து மற்றும் பசுபிக் சமுத்திரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. எனவே, எமக்கு பொருளாதார வளர்ச்சியை உருவாக்க பல வாய்ப்புகள் உள்ளன” என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4