4 ஆம் எண் காரர்களின் குணங்களும், வாழ்க்கை ரகசியமும்.

#Astrology #Lanka4 #life #Numerology #number four
4 ஆம் எண் காரர்களின் குணங்களும், வாழ்க்கை ரகசியமும்.

4ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள்

 4ம் எண் ராகு பகவானுக்குரிய எண்ணாகும். இந்த எண் எங்கும், எதையும் பிரம்மாண்டமாகவும், பெரிதுப்படுத்தி எண்ணக்கூடிய மாபெரும் ஆற்றல் கொண்ட எண்ணாகும்.

 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ராகு பகவான் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் சுதந்திரமாக செயல்படும் விருப்பம் உள்ளவர்கள்.

 இவர்கள் கடுமையான உழைப்பாளிகள். இவர்கள் எந்த நேரத்தில் என்ன செய்வார்கள், சொல்வார்கள்? என்பதை யாராலும் யூகிக்க முடியாது. எந்த காரியத்தையும் திட்டமிட்டு செயல்படுத்த கூடியவர்கள்.

 ஆடம்பர வாழ்க்கையின் மீது அதிகம் மோகம் கொண்டவர்கள். இவர்கள் வாய்சொல்லில் வீரர்கள். சலிக்காமல் பல மணி நேரம் பேசும் திறன் கொண்டவர்கள். இவர்களை சுற்றிலும் எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். 

நான்காம் எண்ணில் பிறந்த பலர் பகுத்தறிவாதிகளாக இருப்பார்கள். வாழ்க்கையில் தங்களுக்கு ஏற்படும் பலவிதமான அனுபவ பாடங்களின் மூலம் தன்னுடைய வாழ்க்கையை திருத்தி கொள்வார்கள்.

 இவர்களிடம் இரகசியங்களை சொன்னால் அது ரகசியமாக இருக்காது. எந்த ஒரு விஷயத்தையும், வேலையையும், அடுத்தவரிடம் சொல்லி விடுவார்கள். மனதில் பட்டதை தைரியமாக, வெளிப்படையாக கூறக்கூடிய இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.

 இவர்கள் நாவை அடக்கி ஆண்டால் நல்ல நிலைக்கு வருவார்கள். தங்களுக்கு தீங்கு செய்தவர்களுக்கு தகுந்த நேரம் பார்த்து சரியான பதிலடி தருவார்கள். எந்த ஒரு காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை அலசி ஆராய்ந்த பிறகே முடிவெடுப்பார்கள்.

 மற்றவர்களுக்கு உதவும் மனமும், அனைவரையும் சமமாக கருதும் குணமும் கொண்டவர்கள். தன் மனதில் தோன்றும் கருத்துக்களையும், எண்ணங்களையும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு அனைவரிடமும் எடுத்துரைக்க கூடியவர்கள்.

 அதீத தன்னம்பிக்கை மற்றும் மிஞ்சிய கற்பனையால் பாதிப்பில் சிக்கிக் கொள்ளக்கூடியவர்கள். புதுமையை விரும்புவதாக எண்ணி சிக்கலில் மாட்டிக் கொள்ளக்கூடியவர்கள்.

 உணர்ச்சிவசத்தினால் முக்கியமான செயல்பாடுகளில் தவறான முடிவுகளை எடுக்கக்கூடியவர்கள். எதிலும் அதிக எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பார்கள். இவர்கள் சமயோசித அறிவு உள்ளவர்கள். தன்னம்பிக்கை அதிகம் உடையவர்கள்.

 பேச்சாற்றல் கொண்டவர்கள். சூழ்நிலை எதுவாயினும் அதை தங்களுக்கு தகுந்த மாதிரி மாற்றி கொள்ளக்கூடியவர்கள்.

 உடலமைப்பு

 இவர்கள் சற்று குண்டான உடலமைப்பு கொண்டவர்கள். மற்றவர்களை கவரும் வகையில் கண்பார்வையும், முக வசீகரமும் உடையவர்கள். தலைமுடி கருமையாகவும், அதே சமயம் அழுத்தமாகப் படியாமல், சற்றுச் சுருண்டும் காணப்படும். 

நடுத்தரமான உயரத்தை கொண்டவர்கள். வரிசையான பல் அமைப்பை உடையவர்கள். துரிதமான செயல்பாடுகளை உடையவர்கள். குடும்பம் உறவுகள் இவர்கள் தாய் மற்றும் தந்தையின் கருத்துக்கு எதிர் கருத்து கொண்டிருப்பார்கள்.

 இவர்களுக்கு உடன் பிறந்தவர்கள் இருந்தால் அவர்களிடம் பொறாமையும், விட்டுக்கொடுத்தல் இருக்காது. சமவயதினர் உடன்பிறந்தவராக இருந்தால் அவர்களிடம் புரிதல் இருக்கும்.

 நண்பர்கள்

 இவர்கள் பரந்த மனம் கொண்டவர்களாக இருப்பதால் நண்பர்களிடம் பெருந்தன்மையாக நடந்து கொள்வார்கள். இவர்கள் சூழ்நிலைக்கேற்ப நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி கொள்வார்கள்.

 பொதுவாக 1, 2, 4, 6 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை நண்பர்களாகவும், கூட்டாளிகளாகவும் வைத்துக் கொள்வது நல்லது. 8ந் தேதி பிறந்தவர்களை நண்பர்களாக வைத்துக் கொள்ளலாமே தவிரப் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொள்ளக்கூடாது. 

1ம் எண்காரர்கள் இவர்களைத் தங்கள் ஆளுமைக்குள் கொண்டு வந்து, இவர்களையும் முன்னேற்ற அடைய செய்வார்கள்.

 திருமண வாழ்க்கை

 இவர்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு அதிகம். தாங்கள் காதலித்தவர்களை சமூகத்தின் கட்டுப்பாட்டையும், எதிர்ப்பையும் மீறி மணந்து கொள்ளும் வேகமும், தைரியமும் இவர்களுக்கு உண்டு. குடும்ப வாழ்க்கை இன்பமாக செல்லும். திருமணமான புதிதில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் பின்னாளில் கணவன் மனைவி இருவரும்\ ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அனுசரித்து ஒற்றுமையாக குடும்பம் நடத்துவார்கள்.

 தம்பதியர்கள் அன்பும், காதலுமாக இனிமையாக இருப்பார்கள். வாழ்க்கையில் இருவரும் இணைந்து முன்னேறுவார்கள். வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் மற்றும் கலை சார்ந்த பொருட்களையும் சேமித்து வைப்பார்கள். குடும்ப பாசத்திலும் அன்பிலும் சிறந்தவர்கள்.

 தொழில்

 இவர்கள் ஒப்பந்த தொழில்கள், கார், லாரி, இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்கள், பேச்சாளர்கள், ஜோதிட நிபுணர்கள், துப்பு துலக்கும் பணி, நிருபர்கள், டைப்பிஸ்ட்டுகள், ரயில்வே, வங்கி ஊழியர்கள், மேற்பார்வையாளர், கராத்தே, சர்க்கஸ், சிலம்பம், மருத்துவம், புத்தகங்கள் விற்பனை வெளியிடுதல் போன்றவை இவர்களுக்கு லாபகரமாக இருக்கும்.

 மேலும் கால்நடை, தரகு, கட்டில், பீரோ தொடர்பான தொழில்கள், சினிமா படங்கள் தயாரித்தல், விற்றல், டெய்லர்கள், அரசு அலுவலகங்களில் புரோக்கர்கள் வேலை, எந்திரங்களின் மூலம் பொருட்கள் உற்பத்தி செய்தல், மெக்கானிக், மரம் தொடர்பான கைத்தொழில்கள், அரசியல் விமர்சகர்கள், இன்ஜினியரிங் தொழிலாளர்கள், வக்கீல் போன்ற வேலைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.

 ஹாஸ்டல், எலக்ட்ரிசியன்கள், இலக்கியம் தொடர்பான வேலைகள், ஹோட்டல் நிர்வாகிகளாகவும், மதுபானங்கள் விற்பனை, மீன், இறைச்சி வியாபாரம், மின்சாரம், மாந்திரீக தொழில்கள், விஷ வைத்தியம் செய்தல், சிலருக்கு சட்டத்திற்கு புறம்பான தொழில் போன்றவைகளும் இவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

 இவர்களில் சிலர் சட்டத்திற்குப் புறம்பான தொழில்களிலும் ஈடுபடுவார்கள். எண்ணின் பலம் குறையும் போது மற்றவர்களை மிரட்டி, விரட்டிப் பிழைக்கவும், ஏமாற்றவும் தயங்கமாட்டார்கள்.

 அதிர்ஷ்ட தினங்கள்

 ஒவ்வொரு மாதத்திலும் வரும் 1, 10, 19 ஆகிய தினங்களும், கூட்டு எண் 1 வரும் தினங்களும் மிகவும் அதிர்ஷ்டமானவை. 28ந்தேதி நடுத்தரமான பலன்களையே கொடுக்கும். அதேபோன்று 9, 18, 27 ஆகிய தேதிகளும், கூட்டு எண் 9 வரும் தினங்களும் நல்ல பலன்களையே கொடுக்கும்.

 அதே போன்று 4, 13, 22, 31 ஆகிய தேதிகள் தாமாகவே நல்ல பலன்களைக் கொடுக்கும். ஆனால் புதிய முயற்சிகளில் ஈடுபட்டால் தோல்வியே மிஞ்சும். அதே போன்று 8, 17, 26 ஆகிய தேதிகளும் கூட்டு எண் 8 வரும் தினங்களும் துரதிருஷ்டமானவை. 7, 16, 25 ஆகிய தேதிகளும் துரதிருஷ்டமானவைதான்.

 அதிர்ஷ்ட இரத்தினம், உலோகம்

 இவர்கள் கோமேதகம் அணிவது மிகவும் சிறப்பைத் தரும். இரத்தினக் கற்களில் மர நிறமுடைய கற்களை அணிய வேண்டும். நீலநிற கற்களும் இவர்கள் அணியலாம்.

 அதிர்ஷ்ட நிறங்கள்

 நீலநிறம் மிகவும் சிறந்தது. நீலக்கோடுகள் குறைந்தபட்சம் இருக்கவேண்டும். மஞ்சள் நிறமும் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கும்.

 இலேசான பச்சை, நீல நிற உடைகளும் நல்லதுதான். இவர்கள் கருப்பு நிற ஆடைகளைத் தவிர்க்க வேண்டும்.

 ஆரோக்கியம் – நோய்

 இவர்களுக்கு பித்தம் தொடர்பான நோய்கள், டென்ஷன், படபடப்பு, இரத்தம் குறைவு, வாயு பிடிப்பு, ஜீரண சக்தி, இடுப்பு வலி, பின் தலை வலி, இரத்த சோகை மற்றும் தலை, கண், மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட கோளாறுகள் அடிக்கடி தோன்றி மறையும்.

 இவர்களுக்கு வரும் நோய்கள் உடனுக்குடன் விலகிவிடும். உடல் சம்பந்தப்பட்ட நோய்களை விட இவர்கள் மனம் சம்பந்தப்பட்ட நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

 தேதி வாரியாக பொதுவான பலன்கள்

 4-ஆம் தேதி பிறந்தவர்கள்

 இவர்களிடம் கண்டிப்பும், அதிகாரமும் நிறைந்து இருக்கும்.  இவர்களுக்குத் துணிச்சலும், பலமும் அதிகம். போலீஸ், போர் வீரர்கள் போன்று உடல்வாகு அமையும்.

 அடிக்கடி இவர்களுக்குச் சோதனைகள் ஏற்படும். அதைக் கண் கலங்காமல், செயல்பட்டு வெற்றி அடைவார்கள். இளமையிலேயே திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது.

 குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். கணவன் மனைவி அன்யோன்யம் உண்டு. தெய்வ பக்தி மிக்கவர்கள்.

 13-ஆம் தேதி பிறந்தவர்கள்

 இவர்கள் இளமையில் அதிகம் போராட்டங்களை சந்திப்பார்கள். அவை எல்லாம் பிற்காலத்து வசதியான வாழ்விற்கு அடித்தளமாக அமைந்துவிடும். காரணமில்லாமல் பலருடைய எதிர்ப்பையும், விரோதத்தையும் சம்பாதிக்க வேண்டியது வரும். இவர்கள் யாருக்கு உதவுகிறார்களோ, அவரே இவர்களுக்குத் துரோகம் செய்வார்கள்.

 கடலில் அலை ஓய்வதில்லை. அதைப்போன்றுதான் இவர்களது பிரச்சினைகளும். இருப்பினும் தங்களின் கடும் உழைப்பால் பேரும் புகழும், பெருஞ்செல்வமும், மிகச் சிறப்பாகத் தேடிக் கொள்வார்கள்.

எதிர்பாராமல் வரும் துன்பங்களெல்லாம் எதிர்பாராமலேயே விலகி ஓடும். நேர்மையும், கடுமையான உழைப்புமே இவர்களை உயர்த்தி விடும்.

 22-ஆம் தேதி பிறந்தவர்கள்

 அதிக நண்பர்களும், நல்ல பேச்சு சாதுர்யமும் இவர்களுக்கு உண்டு. நிர்வாகத் திறமையும், பிடிவாதமும் கொண்டவர்கள். எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக குறுக்கு வழியில் துணிந்து இறங்கி விடுவார்கள். 

பின்பு அதனால் பிரச்சினைக்குள்ளாவார்கள். இவர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் இவருடன் இருப்பவர்களே கவிழ்த்து விடுவார்கள்.

 வீம்புக்காகச் சில செயல்களில் ஈடுபட்டால். தோல்விகளே மிஞ்சும். அரசியல், சினிமா, போட்டி, பந்தயங்களில் அதிர்ஷ்டங்கள் உண்டு. தீய நண்பர்களைத் தெரிந்து அவர்களை ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.

 31-ஆம் தேதி பிறந்தவர்கள்

 தங்களின் சுய திருப்தியே இவர்களுக்கு முக்கியமாக இருக்கும். பணம் இவர்களைத் தேடி வர வேண்டுமே தவிர, இவர்கள் பணத்தைத் தேடினால் கிடைக்காது. தீவிரத் தன்மையும் அதிகாரம் செய்வதும் இவர்கள் குணம். உலக சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். 

மனோசக்தி மிகுந்தவர்கள். ஆன்மிகம், சோதிடம், வேதாந்த ஆராய்ச்சிகளில் ஈடுபாடு உண்டு. எதிரிகளைத் துணிவுடன் சந்திப்பார்கள். உலகத்தில் உள்ள பல விஷயங்களையும், இவர்கள் அறிந்து வைத்திருப்பார்கள். மற்ற மனிதர்களை உடனே எடை போடும் சாமர்த்தியம் உண்டு. இவர்கள் அரசியலில் ஈடுபட்டால் நல்ல பதவிகள் கிடைக்கும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4