திலீபனின் ஊர்திக்கு பச்சைக்கொடி காட்டிய வவுனியா நீதிபதி.

தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ''திலீபன் வழியில் வருகின்றோம்'' என்னும் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனியானது பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்டு, திருகோணமலையில் வலம் வந்த போது பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இனவாதக் குழு ஒன்றினால் தாக்கப்பட்டது.
பின்னர் ஊர்திப் பவனி வவுனியாவை வந்தடைந்தது. குறித்த ஊர்திப் பவனி வவுனியாவில் பயணித்தால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதுடன், இன நல்லுறவு சீர்குலையும் என இருவர் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
குறித்த முறைப்பாட்டுக்கமைய ஊர்திப் பவனிக்கு தடைவிதிக்குமாறு கோரி பொலிஸார் வவுனியா நீதிமன்றில் தடை உத்தரவை கோரியிருந்தனர்.
உயிரிழந்தவர்களை நினைவு கூரும் உரிமை அனைவருக்கும் உள்ளது என்பதை சுட்டிக் காட்டி, பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
இன முரண்பாடுகள் மற்றும் குழப்பங்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவையும் பிறப்பித்துள்ளது.