முகாம்களை அகற்ற குவைத் நகராட்சி அறிவுறுத்தல்
வசந்தகால முகாம்களை அகற்ற குவைத் நகராட்சி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. கால அவகாசம் முடிந்த பிறகு, உரிமையாளர்கள் தங்கள் சொந்த பொறுப்பில் முகாம்களை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என சட்டம் கூறுகிறது.
இதை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை அமுல்படுத்தப்படும் என குவைத் நகராட்சி அறிவித்துள்ளது. குவைத் நகராட்சி பணிப்பாளர் சவுத் அல் டபூஸ், முகாம்களை அகற்றி உடனடியாக வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்
இதன் ஒரு பகுதியாக வசந்தகால முகாம் குழு, களக் குழுக்களை நியமித்துள்ளது. இதன்படி, அனைத்து முகாம் தளங்களிலும் களக் குழுக்கள் கடுமையான சோதனைகளை மேற்கொள்ளவுள்ளது.
முகாம்களை அகற்றி அப்பகுதியை சுத்தப்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வசந்தகால முகாம் குழுவின் தலைவர் பைசல் அல்-ஒதைபி இதனைத் தெரிவித்துள்ளார்.
''இரண்டு நாட்களுக்குள் கூடாரங்களை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என அவர் தெரிவித்துள்ளார். முகாம்களை உரிமையாளர் அகற்றாவிட்டால் அதிகாரிகள் அகற்றி விடுவார்கள்.
மேலும், அகற்றும் செலவு உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கப்படும். விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பூர்வீக குடிமக்களுக்கு பதிலாக வெளிநாட்டவர்களுக்கு உரிமம் வழங்குவதில் சட்டத்தை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த பருவ காலத்தில் வெளிநாட்டவர்களுக்கு முகாம் உரிமம் வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.