எளிமையான முறையில் பால் கொழுக்கட்டை செய்வது எப்படி தெரியுமா?

#SriLanka #Cooking #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
2 months ago
எளிமையான முறையில் பால் கொழுக்கட்டை செய்வது எப்படி தெரியுமா?

நம்முடைய பாரம்பரிய உணவு பொருட்களுள் ஒன்றாக திகழ்வதுதான் பால் கொழுக்கட்டை. பால் கொழுக்கட்டை செய்ய வேண்டும் என்றால் அதற்காக நாம் அரிசியை ஊறவைத்து அதை கெட்டியாக அரைத்து பிறகு அதை உருட்டி அதற்குரிய பக்குவத்தில் அதை வேக வைத்து எடுக்க வேண்டும் என்று பல வழிமுறைகள் இருக்கின்றன. 

இந்த வழிமுறைகளுக்கு பயந்து பலரும் இந்த பால் கொழுக்கட்டையை செய்வதற்கு தயங்குவார்கள். இனிமேல் அந்த பயம் தேவையே இல்லை. மதியம் வடித்த சாதம் மீதம் இருந்தால் உடனே மாலை நேரத்தில் பால் கொழுக்கட்டையை நம்மால் செய்து விட முடியும். 

இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் மீதம் இருக்கும் சாதத்தை வைத்து மிகவும் சுவையான பால் கொழுக்கட்டையை எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம். - 

தேவையான பொருட்கள் வடித்த சாதம் – 1 1/2 கப் 

அரிசி அல்லது மைதா மாவு – 2 டீஸ்பூன் 

எண்ணெய் – 1 ஸ்பூன் 

தண்ணீர் – ஒரு கப் 

சர்க்கரை – 1/2 கப் 

ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை 

பால் – 1 கப் 

செய்முறை 

வடித்த சாதத்தை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த சாதத்தை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். 

பிறகு அரிசி மாவு அல்லது மைதா மாவு இவை இரண்டில் ஏதாவது ஒரு மாவை அதில் சேர்த்து பிணைய வேண்டும். இது நன்றாக கலந்த பிறகு அதில் எண்ணெய் ஊற்றி மறுபடியும் பிணைய வேண்டும். 

கையில் மாவு ஒட்டாத அளவிற்கு வரும் வரை பிணைந்து கொண்டு இருக்க வேண்டும். கையில் ஒட்டாத பதம் வந்த பிறகு அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

பிறகு அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைக்க வேண்டும். அதில் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் சூடானதும் சர்க்கரை சேர்க்க வேண்டும். சர்க்கரை கரைய ஆரம்பிக்கும் பொழுது ஏலக்காய் தூளை அதில் சேர்த்து விட வேண்டும். சர்க்கரை முழுவதும் நன்றாக கரைந்த பிறகு காய்ச்சிய பாலை அதில் ஊற்ற வேண்டும். 

பால் நன்றாக கொதிக்க ஆரம்பித்த பிறகு நாம் உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை ஒவ்வொன்றாக அந்த பாலில் சேர்க்க வேண்டும். அனைத்தையும் பாலில் சேர்த்த பிறகு ஒரு மூடி போட்டு அதை மூடி வைக்க வேண்டும். குறைந்த தீயில் 10 நிமிடம் அது வேக வேண்டும். அவ்வளவுதான் சுவையான பால் கொழுக்கட்டை தயாராகிவிட்டது. சர்க்கரைக்கு பதிலாக நாம் இதில் வெள்ளத்தை சேர்த்தால் பாலை சேர்க்கும் பொழுது திரிந்து போவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் சர்க்கரையை சேர்த்துக் கொள்வதே நல்லது.