தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணை வெற்றி

தென்கொரியாவில் கடந்த 3ந்தேதி அதிபர் யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார்.
இது தொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய யூன் சுக் இயோல், வட கொரிய கம்யூனிஸ்ட் படைகளின் அச்சுறுத்தல் காரணமாக தென் கொரியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
பின்னர் மக்களின் கடும் எதிர்ப்பால் அவசர நிலையை தென்கொரிய அதிபர் வாபஸ் பெற்றார். இதனை தொடர்ந்து அதிபர் யூன் சுக் இயோலை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை தென்கொரிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்தன.
ஆனால் அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ஆளுங்கட்சியினர் புறக்கணித்ததால், தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து தென்கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்ய அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி மற்றும் 5 சிறிய கட்சிகள் இணைந்து மீண்டும் புதிய தீர்மானத்தை தாக்கல் செய்தன.
இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இதில் 204 எம்.பி.க்கள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 85 எம்.பி.க்கள் எதிராகவும் வாக்களித்தனர்.
இதன்படி, தென்கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இந்த தீர்மானத்தின் நகல் யூன் சுக் இயோலுக்கும், அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கும் அனுப்பி வைக்கப்படும்.



