ஒட்டுசுட்டானில் குடும்பஸ்தரை அடித்து கொன்ற மச்சான் கைது; பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலம்
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் கரடிப்புலவு கிராமத்தில் கடந்த 27ம் திகதி இரவு இடம்பெற்ற கொடூர கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர், இனந்தெரியாத நபரால் தாக்கப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத்தைப் பிரிந்து தனிமையில் வசித்து வந்த குறித்த நபர் கடந்த 27ஆம் திகதி இரவு, கடைக்கு சென்று உணவு வாங்கிக் கொண்டு வீடு நோக்கி திரும்பிய வேளையில், அவரது தலையின் பின்பகுதியில் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் அதிக இரத்தகசிவால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போது, அப்பகுதியை சேர்ந்த 30 வயதுடைய மரணமடைந்த நபரின் மச்சான் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தியபோது குறித்த சந்தேகநபர் கொலை செய்ததை பொலிஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
மரணமடைந்தவரின் மகளை கொலை செய்வதாக அவர் மிரட்டியதாகக் கூறப்படுவதால் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக, கோடரி பிடியினால் தலையில் தாக்கியதாக சந்தேக நபர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிசார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் பழம்பாசி - கரடிப்புலவு பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நாகையா நாகராஜா என்பவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்