வங்கி கணக்கினூடாக பண மோசடி: சந்தேக நபர் அதிரடிக் கைது!
பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவினால் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவுக்கு சந்தேகத்திற்கிடமான இரண்டு வங்கிக் கணக்குகள் தொடர்பாக, கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
குறித்த விசாரணைகளுக்கமைய, போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பணம், கணக்கு வைத்திருப்பவரின் ஹன்வெல்ல பகுதியில் உள்ள இரண்டு வங்கிகளின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டு பணம் எடுக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
அதற்கமைய, கணக்குகளைப் பராமரித்த சந்தேக நபர் நேற்று திங்கட்கிழமை (02) கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் இன்று கடுவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு முன்னெடுத்து வருகிறது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்