மட்டக்களப்பில் நீருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோடா மற்றும் கசிப்புடன் மூவர் கைது!
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை களப்பு பகுதியை அண்டிய வாவியில் மறைத்து வைக்கப்பட்ட 14 இலட்சம் மில்லி லீட்டர் கோடா மற்றும் 50,000 மில்லி லீற்றர் கசிப்புடன் மூன்று சந்தேக நபர்களை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலை(10)இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் நேற்று மாலை ஆறு மணி முதல் இன்று அதிகாலை ஆறு மணி வரை இச்சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு விசேட பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்போது ஆரையம்பதியில் இருவர் மற்றும் மாவிலங்க துறையை சேர்ந்த ஒருவருமாக சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். 14 லட்சம் மில்லி லீற்றர் கோடா 50 ஆயிரம் மில்லி லீட்டர் கசிப்பு கோடா பரல்கள், கசிப்பு வடிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கலன்களும் மீட்கப்பட்டதாக மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் பொலிசார் தெரிவித்தனர்.
கைதான சந்தேக நபர்கள்,கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன. மேலதிக விசாரணைகளைகாத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்