12 இளைஞர்களுக்கு மரண தண்டனை - தூண்டியவர்கள் தண்டிக்கப்படவில்லை!!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில், அமரகீர்த்தி அத்துக்கோரல எவ்வித தனிப்பட்ட காரணங்களுக்காகவும் கொல்லப்படவில்லை என்றும், அவர் கொண்டிருந்த அரசியல் கொள்கைக்காகவே வீதியில் வைத்து மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பானது நீதித்துறை மீதான கௌரவத்தை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்தக் கொலைச் சம்பவத்திற்காக தற்போது 12 இளைஞர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அவர்களின் எதிர்காலம் முடிவுக்கு வந்துள்ள போதிலும், இந்த இளைஞர்களின் மனதில் வன்முறையைத் தூண்டி அவர்களை இந்த நிலைக்குத் தள்ளிய உண்மையான குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை என குற்றம் சாட்டினார்.
நாட்டின் ஒரு குடிமகனுக்குக் கூட தீங்கு இழைக்காத நபர்களை வீதியில் அடித்துக் கொல்லும் அளவிற்கு இளைஞர்களின் மனதில் வெறுப்பை விதைத்த தலைவர்கள், இன்று ஜனாதிபதி, அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் அமர்ந்திருப்பது கவலைக்குரியது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
அத்துடன் நாடாளுமன்றத்திற்கு தீ வைக்க வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்த லால் காந்த போன்றவர்களுக்கு எதிராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், தமது எதிர்கால அரசாங்கத்தின் கீழ், வன்முறையைத் தூண்டிய ஜனதா விமுக்தி பெரமுனவின் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எதிராகவும், அரசியல் காரணங்களுக்காக வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு தீ வைத்த நபர்களுக்கு எதிராகவும் சட்டத்தின் ஆதிக்கம் தராசு மாறாமல் நிலைநாட்டப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்