இதுவரை உலகம் கண்டிராத பதிலடி: ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!
ஈரானின் உத்தேசத் தாக்குதல் அறிவிப்பைத் தொடர்ந்து, அந்த நாட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மிகக் கடுமையான இராணுவத் தாக்குதலை அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீது நடத்தப் போவதாக ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை அமையவுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் இந்த அறிவிப்பு குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், "ஈரான் மிகக் கடுமையான தாக்குதலை நடத்தப் போவதாகக் கூறியுள்ளது. ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யாமல் இருப்பதே அவர்களுக்கு நல்லது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "ஒருவேளை அவர்கள் தாக்குதலை முன்னெடுத்தால், இதுவரை உலகம் கண்டிராத ஒரு மாபெரும் பலத்துடன் (With a force that has never been seen before) நாங்கள் அவர்களைத் திருப்பித் தாக்குவோம்" என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே டுபாய், அபுதாபி மற்றும் பஹ்ரைன் ஆகிய பகுதிகளில் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதியின் இந்த எச்சரிக்கை பிராந்தியத்தில் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நட்பு நாடுகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என அமெரிக்கா ஏற்கனவே உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )