அரசாங்கம் அனுமதி வழங்கத் தாமதிப்பது ஏன்? - பின்னணித் தகவல்கள்.
நாட்டில் புதிய நெல் அறுவடை சந்தைக்கு வந்துள்ள நிலையில், உடனடியாக இறக்குமதிக்கு அனுமதி வழங்கினால் உள்ளூர் விவசாயிகள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படுவார்கள் என அரசாங்கம் கருதுவதனால் அரிசி இறக்குமதி தாமதத்துக்கு முக்கிய காரணம் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் கணேஷ் விநாயகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும், விவசாயிகள் நஷ்டமடைவதைத் தடுக்கவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் அரசாங்கம் சந்தை நிலவரத்தைக் கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரிசி இறக்குமதி தொடர்பான முடிவுகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, அதன் பின்னரே வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட வேண்டும்.
இந்தச் சட்ட ரீதியான நடைமுறைகள் முடிவடையக் கூடுதல் காலம் எடுப்பதால் அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அனுமதி டிசம்பர் மாதத்திலேயே வழங்கப்பட்டிருக்க வேண்டும் . அவ்வாறு முன்னரே அனுமதி வழங்கப்படாததால், தற்போது சந்தையில் அரிசிக்கு, குறிப்பாகக் கீரி சம்பா மற்றும் சம்பா வகைகளுக்குப் பெரும் தட்டுப்பாடும் விலையேற்றமும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நுகர்வோர் விவகார அதிகார சபை அரிசி இறக்குமதிக்குப் பரிந்துரை செய்திருந்தாலும், அந்தப் பரிந்துரைகள் இறுதி முடிவாக மாற்றப்பட்டு அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்படுவதில் காலதாமதம் நிலவுகிறது
இந்தத் தாமதத்தினால், வர்த்தமானி அறிவிப்பு வெளியான பின்னரும் கப்பல் போக்குவரத்து மற்றும் சர்வதேச விடுமுறை நாட்களால் (உதாரணமாகத் தூத்துக்குடி துறைமுக விடுமுறைகள்) பொருட்களை உடனுக்குடன் கொண்டு வருவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்