2025ம் ஆண்டு உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த தமிழ் மாணவர்கள்
2025ம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 2 இலட்சத்து 81 ஆயிரத்து 810 மாணவர்களில், ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 527 பேர் பல்கலைக்கழக விண்ணப்பத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இது மொத்தப் பரீட்சார்த்திகளில் 62.64 சதவீதமாகும். பாடசாலை மாணவர்கள் 7,477 பேரும், தனித்தேர்வர்கள் 823 பேரும் அனைத்துப் பாடங்களிலும் 'A' சித்தியைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
இம்முறை பெறுபேறுகளில் தமிழ் மொழி மூல மாணவர்கள் தேசிய மட்டத்தில் மகுடம் சூடியுள்ளனர். பௌதீகவியல் (கணித) பிரிவில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
அதேபோல், வர்த்தகப் பிரிவில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன் சுபைதீன் முஹமட் பர்தான் முதலிடத்தைச் சுவீகரித்து பெருமை சேர்த்துள்ளனர்.
உயிரியல் பிரிவில் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி தர்ஷனா கோணேஷ் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
மாகாண ரீதியாக 69.42 சதவீதத் தேர்ச்சியுடன் மேல் மாகாணம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளன.
இம்முறை பல்கலைக்கழகத் தகுதி பெற்றவர்களில் பெரும்பான்மையானவர்கள் மாணவிகள் என்பதுடன், கலைப் பிரிவில் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை 32 சதவீதம் வரை குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பாடங்கள் மீது மாணவர்களிடையே அதிக ஆர்வம் காணப்படுவதாக ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
(வீடியோ இங்கே )