பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகக் கைகோர்க்கும் விவாகரத்து பெற்ற பெற்றோர்!
விவாகரத்து பெற்ற தம்பதிகள் தங்களது பிள்ளைகளை இணைந்து வளர்ப்பதற்கான 'கூட்டுப் பொறுப்புரிமை' (Joint Custody) முறையை ஜப்பான் முதல் முறையாக அமுல்படுத்தியுள்ளது.
அந்நாட்டின் சிவில் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சீர்திருத்தம், 19ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது.இதன்படி விவாகரத்து செய்யும் தம்பதிகள் பரஸ்பர உடன்படிக்கையின் மூலம் பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பைப் பகிர்ந்துகொள்ளலாம் அல்லது ஒருவரிடம் மட்டும் ஒப்படைக்கலாம்.
ஏற்கனவே விவாகரத்து பெற்றவர்களும் தற்போதுள்ள நடைமுறையை மாற்றக் கோரி குடும்ப நீதிமன்றத்தை நாட முடியும். பிள்ளையின் கல்வி மற்றும் இருப்பிடம் போன்ற முக்கிய விடயங்களில் இரு பெற்றோரும் இணைந்து தீர்மானம் எடுக்க வேண்டும்.
எனினும், அன்றாடத் தேவைகள் மற்றும் அவசர மருத்துவ நிலைகளில் ஒருவர் தனித்து முடிவெடுக்க அனுமதி உண்டு.தம்பதிகளிடையே இணக்கம் ஏற்படாத பட்சத்தில், பிள்ளையின் நலனைக் கருத்திற்கொண்டு கூட்டுப் பொறுப்பா அல்லது தனிப் பொறுப்பா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும். துஷ்பிரயோகங்கள் அல்லது குடும்ப வன்முறைகள் பதிவாகியிருந்தால், பிள்ளையின் பாதுகாப்பைக் கருதி ஒருவருக்கு மட்டுமே பொறுப்புரிமை வழங்கப்படும்.
புதிய சட்டத்தின்படி, விவாகரத்து பெற்ற பின்னர் பிள்ளையுடன் வசிக்கும் பெற்றோர், மற்றவரிடமிருந்து ஒரு பிள்ளைக்கு மாதந்தோறும் 20,000 யென் தொகையை கோர முடியும். ஏப்ரல் 1 ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னர் இடம்பெறும் விவாகரத்துகளுக்கு இது செல்லுபடியாகும்.
மேலும், பிள்ளைகளுக்கான பராமரிப்புச் செலவு வழங்கப்படுவதை உறுதிசெய்ய, ஏனைய கடன் கொடுப்பனவுகளை விட இதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் புதிய சட்டம் குறிப்பிடுகின்றது.
முன்னைய சட்டத்தின் கீழ், ஒருவர் மட்டுமே பிள்ளையைப் பொறுப்பேற்க முடியும் என்ற நிலையால், விவாகரத்துக்குப் பின் மற்றைய பெற்றோர் பிள்ளையுடனான தொடர்பை இழக்கும் நிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )