திராணியற்ற நிர்வாகம்; தட்டுப்பாடுகளுக்கு அரசாங்கமே பொறுப்பு - சஜித் விளாசல்.
நாட்டிற்கும் மக்களுக்கும் வழங்கிய பொய் வாக்குறுதிகள் மற்றும் ஏமாற்று வித்தைகள் காரணமாக, இன்று அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களால் மக்கள் முன்னிலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டில் உரத் தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் கூறினாலும், யதார்த்தத்தில் உரத்திற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் உரக் கறுப்புச் சந்தை வியாபாரம் செழித்து வளர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதியாளர்கள் மற்றும் அரசாங்கத்தைச் சுற்றியுள்ள செல்வந்த வர்த்தகர்களின் கைகளுக்கே பணம் செல்கிறதே தவிர, சாதாரண மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
தற்போதைய வறட்சியான காலப்பகுதியில் குடிநீர், விவசாய நீர் மற்றும் மின்சார உற்பத்திக்குத் தேவையான நீரைச் சரியாக முகாமைத்துவம் செய்ய அரசாங்கம் தவறிவிட்டது.
நிலக்கரி ஊழலால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டவே மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தரம் குறைந்த நிலக்கரியைத் தொடர்ந்து இறக்குமதி செய்வதால் மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்து, எதிர்காலத்தில் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்தார்.
ஹோர்முஸ் நீரிணை அல்லது பாப்-எல்-மண்டேப் நீரிணைகள் மூடப்பட்டால் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்து தாம் முன்கூட்டியே எச்சரித்தும், ரஷ்யாவிடம் எரிபொருள் பெறுமாறு கோரியும் அரசாங்கம் செவிசாய்க்கவில்லை.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் எரிபொருள் மீதான வரிகளைக் குறைத்துள்ளது போல, இலங்கையிலும் வரிகளைக் குறைத்து மக்களுக்குச் சலுகை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
அரசாங்கம் சமூக ஊடகங்கள் வாயிலாகப் போலிப் புகழைத் தேடுவதை நிறுத்திவிட்டு, பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட 220 இலட்சம் மக்களுக்கும் ஒரு விசேட பொருளாதார நிவாரணப் பொதியை வழங்க வேண்டும். தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதியை நிறுத்தி, மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்.
எரிபொருள் விலையைக் குறைத்து மக்களின் வாழ்வாதார சுமையைத் தளர்த்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
(வீடியோ இங்கே )