6 மாதங்களாகியும் சீரமைக்கப்படாத பாலம் - மாநகரசபை மீது கடும் அதிருப்தி!
நுவரெலியா நகரின் முக்கிய போக்குவரத்து நரம்பாக விளங்கும் பேருந்து நிலையப் பாலம், புயல் அனர்த்தத்தால் சேதமடைந்து 6 மாதங்கள் கடந்தும் இன்னும் புனரமைக்கப்படாமல் இருப்பது பொதுமக்களிடையே கடும் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது.
'தித்வா' புயலால் சேதமடைந்த இந்தப் பாலத்திற்குப் பதிலாக தற்காலிக மாற்றுப் பாதை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. நிரந்தரத் தீர்வு காண அதிகாரிகள் தவறிவிட்டதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் இந்தப் பாதை தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.
நகரின் அழகுபடுத்தல் திட்டங்களுக்குக் கோடி கணக்கில் செலவிடப்படும் நிலையில், மக்களின் அத்தியாவசியத் தேவையான பாலத்தைப் புனரமைக்காதது ஏன் எனச் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
சுற்றுலா நகரமான நுவரெலியாவின் நற்பெயரைக் காக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உடனடியாகப் புதிய பாலத்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகளைப் புறக்கணித்துவிட்டு நகர அபிவிருத்தி குறித்துப் பேசுவது பயனற்றது என நுவரெலியா மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே )