காணாமல் போனோர் குடும்பங்களுக்கான நிதி குறைக்கப்படவில்லை: குற்றச்சாட்டுகளைப் நிராகரித்தது OMP!
பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் மாதாந்த இடைக்கால நிவாரணக் கொடுப்பனவிற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளைக் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP - Office on Missing Persons) முழுமையாக நிராகரித்துள்ளது.
சமூக ஊடகங்களிலும் சில ஊடக நிறுவனங்களிலும் இது தொடர்பாக வெளியாகிய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என OMP வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 20,000 ரூபா இடைக்கால நிவாரணக் கொடுப்பனவு எவ்வித தடையுமின்றி, நிதி குறைக்கப்படாமல் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
புதிய விண்ணப்பதாரர்களின் விபரங்களைச் சரிபார்த்து, அவர்களுக்கான கொடுப்பனவுகளைப் பட்டியலிடுவதில் ஏற்பட்டுள்ள சில நிர்வாக நடைமுறை தாமதங்கள் காரணமாகவே நிதி தாமதித்ததே தவிர, அரசாங்கம் நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கவில்லை என OMP தெளிவுபடுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் இந்த மனிதாபிமான அடிப்படையிலான கொடுப்பனவுகளை எவ்வித தடங்கலும் இன்றி தற்போதைய நிதியாண்டிலும் முழுமையாக வழங்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் மேலும் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )