அனுராதபுரத்தில் பாதுகாப்பற்ற நிலையில் 16 வயதுக்குட்பட்ட 5,000க்கும் அதிகமான சிறுவர்கள்!
அனுராதபுரம் மாவட்டத்தில் 16 வயதுக்குட்பட்ட 5,780 சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகக்கூடிய ஆபத்தான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
அனுராதபுரம் மாகாண சபை மண்டபத்தில் அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் ஆளுநர் வசந்த ஜினதாச ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், வடமத்திய மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் டி.பி. சுகதபால இந்த தகவல்களை வெளியிட்டார்.
பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள சிறுவர்களில் 4,248 பேர் மிக அதிக ஆபத்துக்குள்ளானவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, பாதுகாப்பற்ற நிலையில் உள்ள சிறுவர்கள் அதிகளவில் தம்புத்தேகம பகுதியில் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனுராதபுரம் மாவட்டத்தில் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டிய பிரதி பொலிஸ்மா அதிபர், அதற்கான உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களையும் வெளியிட்டார்.
அதன்படி, கடந்த ஆண்டில் 36 பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டின் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 24 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை உறவினர்களின் பராமரிப்பில் விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதாகவும், இவ்வாறு தற்காலிக பராமரிப்பில் விடப்படும் சிறுவர்கள் போதிய கவனிப்பும் பாதுகாப்பும் இன்றி அலட்சியப்படுத்தப்படுவது இந்த நிலைமைக்கு முக்கிய காரணமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
(வீடியோ இங்கே )