கபில சந்திரசேனவின் விசாரணை கோட்டை நீதவான் முன்னிலையில்: ஜூன் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேனவின் மர்ம மரணம் தொடர்பான மரண விசாரணை இன்று (29) 6ஆவது நாளாகவும் கொழும்பு கோட்டை நீதவான் பஸன் அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் (CCD) மற்றும் சட்டத்தரணிகள் தரப்பால் பல முக்கிய விபரங்கள் நீதிமன்றில் வெளிப்படுத்தப்பட்டன.
அலைபேசியை சிதைக்க அமெரிக்க FBI இன் உதவி! கபில சந்திரசேனவின் மரணத்தின் பின்னணியைக் கண்டறிவதற்கு அவரது அலைபேசி மிக முக்கிய சான்றாகக் கருதப்படுகிறது. எனினும், பூட்டப்பட்டுள்ள அவரது அலைபேசியின் தரவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக அமெரிக்காவின் புகழ்பெற்ற புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ இன் தொழில்நுட்ப உதவியை மின்னஞ்சல் ஊடாகக் கோரியுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.
கபில சந்திரசேன கடந்த மே 5 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், பிணை நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டில் மே 7 ஆம் திகதி அவருக்கு எதிராக மீண்டும் ஒரு புதிய கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட மே 7 ஆம் திகதி இரவன்று, கபில சந்திரசேன உள்ளிட்ட ஒரு குழுவினர் பிரபல கிரிக்கெட் பிரமுகர் அரவிந்த டி சில்வாவின் இல்லத்திற்குச் சென்றுள்ளனர்.
அங்கிருந்து அவர்கள் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்ஸகுலரத்னவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர் என்பது சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி அழைப்புப் பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அரவிந்த டி சில்வாவின் மனைவியின் அலைபேசி ஊடாக கபில சந்திரசேன மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்ஸகுலரத்ன ஆகியோருக்கு இடையில் ஒரு முக்கிய உரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும், அது குறித்தே மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் நீதிமன்றில் சுட்டிக்காட்டினர்.
இந்தச் சந்திப்பு நடந்த சில மணித்தியாலங்களில், அதாவது மே 8 ஆம் திகதி காலை கபில சந்திரசேன கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த விசாரணையில் 19ஆவது மற்றும் 20ஆவது சாட்சியாளர்களாகப் பெயரிடப்பட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்ஸகுலரத்ன மற்றும் உதவி சட்டத்தரணி உதார முஹந்திரம்கே ஆகியோர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
அவர்கள் சார்பில் முன்னிலையான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவர் ரஜீவ் அமரசூரிய, "ஒரு சட்டத்தரணிக்கும் அவரது வாடிக்கையாளருக்கும் (Client) இடையிலான சட்ட ஆலோசனைகள் மற்றும் இரகசியங்களைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு சட்டத்தரணிகளுக்கு உள்ளது. எனவே குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் கீழ் இவர்களிடம் சாட்சியம் பெறுவது அவசியமா இல்லையா என்பதை நீதவான் பரிசீலிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதவான் பஸன் அமரசேன, இந்த இரு சட்டத்தரணிகளையும் சாட்சியமளிக்க அழைப்பதா இல்லையா என்பது குறித்த இறுதித் தீர்ப்பை வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி அறிவிப்பதாக உத்தரவிட்டார்.
அதுவரை அவர்கள் இருவரும் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அழைப்பாணை (Summons) விடுக்கப்பட்டால் மாத்திரம் ஜூன் 2 இல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )