யாழ் நூலகம் எரியூட்டப்பட்டு 45 ஆண்டுகள்: மலரஞ்சலி செலுத்தி நினைவு கூரல்!
நூலகம் எரிக்கப்பட்ட போது அங்கிருந்த சுமார் 97,000 க்கும் மேற்பட்ட அரிய நூல்கள், நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள், வரலாற்று ஆவணங்கள் மற்றும் 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பத்திரிகைகளின் மூலப்பிரதிகள் என அனைத்தும் முற்றாக சாம்பலாகின.
இருபதாம் நூற்றாண்டின் மிக மோசமான கலாச்சார ஒடுக்குமுறையாகவும், இனவழிப்பு நடவடிக்கையாகவும் சர்வதேச அளவில் இந்தச் சம்பவம் பார்க்கப்படுகிறது.
புகழ்பெற்ற தத்துவஞானியும் கலை விமர்சகருமான ஆனந்த குமாரசுவாமி, பேராசிரியர் டாக்டர் ஐசக் தம்பையா போன்ற அறிஞர்களின் அரிய கையெழுத்துப் பிரதிகளும் இதன்போது தீக்கிரையாக்கப்பட்டன.
யாழ் நூலகத்தின் மீது அதீத பற்றும், அங்கிருந்த அரிய ஆவணங்கள் மீது மிகுந்த மதிப்பும் கொண்டிருந்த பன்மொழி அறிஞரான அருட்கலாநிதி எச். எஸ். தாவீது அடிகள், நூலகம் எரியும் செய்தியைக் கேட்டு, அதிர்ச்சியிலும் ஆழ்ந்த வேதனையிலும் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த 45ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், நூலகத்தின் தோற்றத்திற்கு வித்திட்ட கே. எம். செல்லப்பா மற்றும் தாவீது அடிகள் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, 45 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில் 45 சுடர்கள் ஏற்றப்பட்டு ஈழத் தமிழர்களின் அறிவுசார் அடையாளத்தின் மீளெழுச்சி நினைவு கூரப்பட்டது.
1981 ஜூன் 1 இல் எரியூட்டப்பட்ட யாழ் பொது நூலகத்தின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது.
97,000 அரிய நூல்களையும் தமிழ் பாரம்பரிய ஆவணங்களையும் இழந்த இந்த ஆறா வடுவின் நினைவாக யாழ் மாநகர சபை அதிகாரிகள் மற்றும் வாசகர்கள் இணைந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
(வீடியோ இங்கே )