பல தசாப்தங்களுக்குப் பின் கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தில் மீண்டும் கரும்புச் செய்கை ஆரம்பம்!
கிளிநொச்சி - ஸ்கந்தபுரம் பகுதியில் கடந்த பல தசாப்தங்களுக்கு முன்னர் (யுத்தத்திற்கு முற்பட்ட காலத்தில்) கரும்புச் செய்கை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தது.
எனினும், ஏற்பட்ட யுத்தச் சூழல் காரணமாக இக்காணிகள் கைவிடப்பட்டு, காடுகளாக மாறி கரும்புச் செய்கை முற்றாக முடங்கியிருந்தது. தற்போது பல தசாப்தங்களுக்குப் பின்னர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் வழிகாட்டலில் இந்த நிலங்கள் துப்புரவு செய்யப்பட்டு, முதற்கட்டமாக 20 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு, தலா ஒரு ஏக்கர் வீதம் 20 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தச் செய்கை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், இங்கு விளையும் கரும்புகளை Natural Roots நிறுவனம் நேரடியாகவே கொள்வனவு செய்வதற்கு உடன்பாடு எட்டியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு சந்தைப்படுத்தல் மற்றும் இடைத்தரகர்கள் குறித்த அச்சம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு கரும்பு ஆராய்ச்சி நிறுவனம், விவசாய ஆராய்ச்சி திணைக்களம் மற்றும் யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் ஆகியோர் இணைந்து தொழில்நுட்ப ஆலோசனைகளையும், உயர்தர கரும்புத் தடிகளையும் வழங்கியுள்ளனர்.
முதற்கட்டமாக 20 ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில், வரும் காலங்களில் ஸ்கந்தபுரம் பகுதியில் உள்ள ஏனைய கைவிடப்பட்ட காணிகளுக்கும் இச் செய்கையை விரிவுபடுத்தி, மாவட்டத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே