வரலாறு காணாத அளவில் உயரும் வெப்பநிலை : ஜேர்மனியில் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்!
மேற்கு ஐரோப்பாவில் பல உயிரிழப்புகளுக்குக் காரணமான கடும் வெப்ப அலை, தற்போது கிழக்கு நோக்கிப் பரவி வருவதால் ஜேர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் கடுமையான வெப்பத்தின் தாக்கத்தை எதிர்கொண்டுள்ளன.
ஜேர்மனியில் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ள நிலையில், பொதுமக்கள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
டென்மார்க் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஓடென்ஸின் (Odense) வடக்குப் பகுதியில் 36.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
1874 ஆம் ஆண்டு முதல் வானிலை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதுவே நாட்டில் ஜூன் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும்.
இதனிடையே, ஸ்லோவாக்கியாவில் வெள்ளிக்கிழமை இரவு வெப்பநிலை 26.3 டிகிரி செல்சியஸுக்குக் கீழ் குறையாததால், நாட்டின் வரலாற்றில் பதிவான மிக அதிக வெப்பமான இரவாக அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளிலும் ஜூன் மாதத்தில் வரலாறு காணாத அளவிலான வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தற்போது போலந்தை நோக்கி நகரும் இந்த வெப்ப அலை, மேலும் புதிய வெப்பநிலை சாதனைகளை ஏற்படுத்தக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை, பிரெஞ்சு எல்லைக்கு அருகிலுள்ள ஜேர்மனியின் சார்ப்ரூக்கன் (Saarbrücken) பகுதியில் 41.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது.
ஜேர்மனியின் தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, நாடு முழுவதும் சராசரியாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் என்றும், சில பகுதிகளில் அது 42 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஜேர்மனியின் தேசிய தொடருந்து சேவையான டாய்ச் பான் (Deutsche Bahn), நீண்ட தூரப் பயணிகளுக்கு அடுத்த வார தொடக்கம் வரை முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை கட்டணமின்றி ரத்து செய்யும் சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது.
இதற்கிடையில், வார இறுதிக்குப் பின்னர் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்றும், இன்று (28) பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பா முழுவதும் நீடித்து வரும் இந்த கடும் வெப்ப அலை காரணமாக, பொதுமக்கள் தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்கவும், போதிய அளவு நீர் அருந்தவும், முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்தவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே