கிளிநொச்சியில் திடீர் சுற்றிவளைப்பு - 13 வர்த்தகர்கள், வர்த்தக நிறுவனங்கள் மீது வழக்கு தாக்கல் செய்ய ஏற்பாடு!
கிளிநொச்சி நகர்ப் பகுதிகளில் 21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குச் சட்டவிரோதமான முறையில் புகைப் பொருட்களை விற்பனை செய்த 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக பொலிஸார் அதிரடி சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி நகரில் உள்ள சில வர்த்தக நிலையங்களில், சிறுவர்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாக சிகரெட் மற்றும் பீடி போன்ற புகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, கிளிநொச்சி பொலிஸ் அதிகாரியின் வழிகாட்டலில் விசேட உத்தியொன்றைக் கையாண்ட பொலிஸார், சிறுவன் ஒருவரிடம் பணத்தைக் கொடுத்து வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பி புகைப் பொருட்களை வாங்குமாறு பணித்துள்ளனர்.
அதன்படி, குறித்த சிறுவன் வர்த்தக நிலையங்களுக்குச் சென்று பணத்தைக் கொடுத்து புகைப் பொருட்களைப் பெற்றுக் கொண்ட போது, அங்கு மறைந்திருந்த பொலிஸார் வர்த்தகர்களைக் கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளனர்.
இதேபோன்று நகரின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட அதிரடிச் சோதனைகளின் போது, சிறுவர்களுக்குப் புகைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 13 வர்த்தக நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட வர்த்தகர்கள் மற்றும் 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கான ஏற்பாடுகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே