5,000 ரூபா லஞ்சம் பெற்ற காலி மாநகர சபை அதிகாரிகள் இருவருக்கு 14 வரை விளக்கமறியல்!
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் பிணை கோரிய போதிலும், நீதவான் அந்த விண்ணப்பத்தை நிராகரித்தார். தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பரப் பலகையைக் காட்சிப்படுத்துவதற்கு, காலி மாநகர சபைக்குச் செலுத்த வேண்டிய வரி தொடர்பான ஆவணங்களை விரைவாகப் பெற்றுத் தருவதாகக் கூறி, சந்தேகநபர்கள் 5,000 ரூபாய் கையூட்டல் கோரிப் பெற்றுள்ளதாகப் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
முன்னதாக, இவர்கள் காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேகநபர், காலி நீதவான் முன்னிலையில் தாமாக முன்வந்து வாக்குமூலம் வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே